மதுரை வந்த ஆளுநர் ரவிக்கு கறுப்பு கொடி போராட்டம்: 17 பேர் கைது!

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வருகை தந்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட 17 பேரை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி கைது செய்து அழைத்து சென்றனர்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 54வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மதுரை வந்திருந்தார். மத்திய அமைச்சர் எல். முருகனும் இந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பேசினார். ஆளுநர் ஆர்.என். ரவியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில்தான் ஆளுநர் பல்கலைக்கழக விவகாரங்களில் தன்னிச்சையாக முடிவு எடுப்பதாக கூறி, மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகத்திற்கு வெளியில் சமூகநீதி மாணவர் இயக்கம், தமுமுக மற்றும் இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்டோர் ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மதுரையில் பல்வேறு அமைப்பினர் ஆளுநரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தமுமுக நிர்வாகிகள் அப்துல் ஹமீது, பக்ருதீன், மாவட்ட தலைவர் ஷேக் இப்ராஹிம் உள்ளிட்ட 17 பேரை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி கைது செய்து அழைத்து சென்றனர். ஆளுநர் வருகையையொட்டி கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்த போதிலும் இந்த திடீர் ஆர்ப்பாட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல் வெடிகுண்டு பரிசோதனை நிபுணர்கள் முன்கூட்டியே வந்து அங்கு சோதனை மேற்கொண்டனர். கடுமையான சோதனைக்கு பின்னரே மாணவர்கள் முக்கிய பிரமுகர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர் பட்டமளிப்பு விழா அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டனர்.