ஜூலை 28ல் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைப்பதற்காக ஜூலை 28 ஆம் தேதி சென்னை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.

செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டியை தமிழ்நாட்டில் நடத்துவதற்கு சர்வதேச செஸ் கூட்டமைப்பு அனுமதி வழங்கியது. இதையடுத்து 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டி தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் ஜூலை 28 ஆம் தேதி வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கி ஆகஸ்ட் 10 வரை போட்டிகள் நடைபெற உள்ளது. இதில், 186 நாடுகளை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட சர்வதேச வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இவர்களுக்காக, மாமல்லபுத்தில் உள்ள நட்சத்திர விடுதிகளில் 2,600 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டியை நடத்துவதற்காக தமிழக அரசு ரூ.92.13 கோடிக்கும் மேல் நிதி ஒதுக்கி பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. மேலும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கான செலவை தமிழக அரசே ஏற்கும் என தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நேரு விளையாட்டரங்கில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைப்பதற்காக ஜூலை 28 ஆம் தேதி சென்னை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி என தகவல்கள் வெளியாகி உள்ளது.