வெளிநாட்டில் இருந்து கேரளா வந்தவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு!

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா திரும்பியவருக்கு குரங்கு அம்மைக்கான அறிகுறிகள் உள்ளதால் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மக்கள் பீதியடைய வேண்டாம் என கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கேரளாவில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திரும்பிய ஒருவருக்கு குரங்கு காய்ச்சலின் அறிகுறிகள் இருப்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். அவரது மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே குரங்கு அம்மை தொற்று இருப்பதை உறுதி செய்ய முடியும் என்றார். சம்பந்தப்பட்ட நபருக்கு குரங்கு காய்ச்சலின் அறிகுறிகளைக் காட்டியதாகவும், வெளிநாட்டில் உள்ள குரங்கு அம்மை நோயாளி ஒருவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகவும் கூறினார். மேலும், குரங்கு அம்மைக்கான அறிகுறிகள் உள்ள நபர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மக்கள் பீதியடைய வேண்டாம் எனவும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த நிலையில் குரங்கு அம்மை நோய் குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண், அனைத்து மாநில சுகாதாரத் துறை செயலாளருக்கு கடிதம் எழுதி உள்ளார். நோய் குறித்து பரிசோதனை செய்யும் குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார். மேலும் அதில் கூறி இருப்பதாவது:-

பொது அறிகுறிகள் மற்றும் அறிகுறிகளைப் பற்றி மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், நோய் கண்காணிப்பு குழுக்கள், உள்ளிட்ட அனைத்து முக்கிய பங்குதாரர்களின் கண்காணிப்பு உள்ளிட்ட முக்கிய நடவடிக்கைகளை எடுக்குமாறு சுகாதார செயலாளர் அனைத்து மாநிலங்களையும் யூனியன் பிரதேசங்களையும் கேட்டுக் கொண்டார்.

ஜூலை 13 தரவுகளின்படி உலகம் முழுவதும் குரங்கம்மை தொற்று10,400-ஐத் தாண்டி உள்ளது சுமார் 60 நாடுகளில் இந்த வைரஸ் நோய் பரவி உள்ளது.