பார்லிமென்டில் எந்த வார்த்தையையும் தடை செய்யவில்லை: சபாநாயகர் ஓம்பிர்லா!

பார்லிமென்டில் பயன்படுத்தப்படுத்தப்படும் எந்த வார்த்தையையும் தடை செய்யவில்லை என லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா கூறியுள்ளார்.

பார்லிமென்டின் இரு அவைகளிலும் பேசும் உறுப்பினர்கள் அவையின் மாண்புக்கு எதிரான வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால் அதை லோக்சபா சபாநாயகர் மற்றும் ராஜ்யசபா தலைவர் அவைக் குறிப்பில் இருந்து நீக்க உத்தரவிடலாம். இந்த நிலையில் பார்லிமென்டில் எந்தெந்த வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது என்ற புதிய பட்டியல் வெளியிடப்பட்டது. வரும் 18ம் தேதி கூடவுள்ள மழைக்கால கூட்டத்தொடரில் இருந்து இது அமலுக்கு வருகிறது. அதன்படி, பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் அடங்கிய தொகுப்பில், வெட்கக்கேடு, துரோகம், ஊழல், ஒட்டுகேட்பு, கொரோனா பரப்புபவர், நாடகம், கபட நாடகம், அராஜகவாதி, சகுனி, சர்வாதிகாரம், சர்வாதிகாரி, அழிவு சக்தி, காலிஸ்தானி, இரட்டை வேடம், பயனற்றது, நாடகம், ரத்தக்களரி, குரூரம், கோழை, கிரிமினல், முதலை கண்ணீர், அவமானம், கழுதை, கண்துடைப்பு, ரவுடித்தனம், போலித்தனம், தவறாக வழிநடத்துதல், பொய் என இந்தப் பட்டியல் நீள்கிறது. இதுதான் இப்போது பெரும் விவாதமாகி உள்ளது.

இது தொடர்பாக லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா கூறியதாவது:-

முன்பு, இது போன்று பார்லிமென்டில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் குறித்த புத்தகம் வெளியிடப்பட்டது. காகிதங்கள் வீணாகாமல் இருக்க, அதை இண்டர்நெட்டில் வெளியிட்டோம். எந்த வார்த்தையையும் தடை செய்யவில்லை. நீக்கப்பட்ட வார்த்தைகளின் தொகுப்பை தான் வெளியிட்டுள்ளோம். 1,100 பக்கங்கள் கொண்ட பக்கங்களை எதிர்க்கட்சியினர் படித்து விட்டனரா? அவ்வாறு படித்திருந்தால், தவறான கருத்தை பரப்பியிருக்க மாட்டார்கள். இது போன்ற புத்தகங்கள், 1954,1986, 1992,1999, 2004, 2009,2010ம் ஆண்டுகளில் வெளியிடப்பட்டது. 2010 ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்பட்டு வருகிறது. நீக்கப்பட்ட வார்த்தைகள், எதிர்க்கட்சி மற்றும் அதிகாரத்தில் உள்ள கட்சியால் பார்லிமென்டில் பயன்படுத்தப்பட்டது. எதிர்க்கட்சிகள் மட்டுமே பயன்படுத்தும் வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து நீக்குவது போன்ற எதுவும் இல்லை. தடை செய்யப்பட்ட வார்த்தைகள் எதுவும் இல்லை. முன்பு ஆட்சேபிக்கப்பட்ட வார்த்தைகளை நீக்கவில்லை. இவ்வாறு ஓம்பிர்லா கூறினார்.