கொரோனா தொற்று: முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுத்து வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. இதனை கட்டுக்குள் கொண்டு வர மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை அதிகரிக்கும் கொரோனா தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்தி அதிகாரிகளை முதல்வர் ஸ்டாலின் அலர்ட் செய்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திமுக மகளிரணிச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழிக்கு ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தனர்.

இந்த நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நேற்று முன் தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாமல்லபுரம் பூஞ்சேரி கிராமத்தில் நடைபெற்ற சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை சிறப்பாக நடத்துவது தொடர்பான சிறப்பு ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற நிலையில், முதல்வர் ஸ்டாலினுக்கு உடல் சோர்வு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. தொடர்ந்து, மருத்துவர்களின் ஆலோசனைப்படி, அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். முதல்வர் ஸ்டாலின் ஏற்கெனவே முதல் தவணை, இரண்டாவது மற்றும் பூஸ்டர் தவணை தடுப்பூசிகளை ஏற்கனவே செலுத்திக் கொண்டவர் என்பது கவனிக்கத்தக்கது.

இந்த நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஸ்டாலின் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பரிசோதனைக்காக காவேரி மருத்துவமனைக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின், சிடி ஸ்கேன் உள்ளிட்ட கொரோனா சம்பந்தமான பரிசோதனைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது.