திமுக அமைச்சர்கள் மீது வழக்கு உள்ளது ஆர்.எஸ்.பாரதிக்கு தெரியாதா?: எடப்பாடி

சில நாட்களுக்கு முன்பு நடந்த அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி, ‛என்னை இன்னும் பழைய பழனிசாமி என நினைத்தீர்களா ஸ்டாலின் அவர்களே, நடக்காது’ என குறிப்பிட்டு பேசியிருந்தார். இதற்கு பதிலடி தரும் விதமாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ‛பழைய பழனிசாமி கொலை வழக்குகளை எதிர்கொண்டார். புது பழனிசாமி கொடநாடு வழக்கை எதிர்கொள்கிறார்’ எனக் கூறியிருந்தார்.

அதிமுக இடைக்கால பொதுச்செயலளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்ற பின்னர் சேலம் தலைவாசலில் நடந்த பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

சேலம் எப்போதும் அதிமுகவின் கோட்டை. தமிழகத்தில் வேண்டுமானால் திமுக ஆட்சியாக இருக்கலாம், ஆனால் சேலத்தில் அதிமுக தான். எத்தனை சோதனைகள் வந்தாலும் அதனை சாதனை படிக்கட்டுகளாக மாற்றுவோம்.

கடந்த தேர்தலில் அதிமுக ஆட்சி வருவதற்கு தடைக்கல்லாக இருந்தவர்கள் (ஓபிஎஸ் உள்ளிட்டோர்) தற்போது உடைத்து எறியப்பட்டுள்ளனர். ஒற்றை தலைமையை ஏற்று பெரும்பாலானவர்களின் ஆதரவோடு இடைக்கால பொதுச்செயலாளராக நான் பொறுப்பேற்று உள்ளேன். தலைமை அலுவலகத்தை குண்டர்களை கொண்டு தாக்கி அறை கதவுகள் உடைக்கப்பட்டு அலுவலகத்தை சூறையாடினார்கள். கட்சி அலுவலகமான எம்.ஜி.ஆரின் சொத்தை சிலபேர் அபகரிக்க பார்க்கின்றனர். அதிமுக உண்மையான தொண்டர்கள் இருக்கும் வரை அதனை தொட்டுப்பார்க்க முடியாது. ஸ்டாலின் ஆட்சி அதிகாரத்தை வைத்து அதிமுக.வை செயல்பட விடாமல் முடக்க பார்க்கிறார். ஸ்டாலின் அதிமுக.,வின் ஒரு தொண்டனை கூட தொட்டுப்பார்க்க முடியாது. துரோகிகளும், திமுக.,வும் சேர்ந்து அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்துள்ளனர். ஆட்சி அதிகாரத்தை வைத்துக்கொண்டு அதிமுக.,வை அழிக்க நினைத்தால் நடக்காது. காலச்சக்கரம் சுழன்று அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்.

இப்போது அமைச்சர்களாக இருக்கும் 13 பேர் மீது ஏற்கனவே வழக்கு உள்ளது திமுக.,வின் ஆர்.எஸ்.பாரதிக்கு தெரியாதா? அவர் கட்சியில் இருந்து கைவிடப்படும் சூழலில் இருப்பதால் எதைவேண்டுமானாலும் பேசி கட்சியில் பொறுப்பு வகிக்க பார்க்கிறார். நாங்கள் பேச ஆரம்பித்தால், திமுக தலைவர்கள் நாறிப்போய்விடுவார்கள். அதிமுக தொண்டர்கள் உழைத்து வாழ்பவர்கள், அன்னக்காவடிகள் கிடையாது, திமுக.,வை போன்று சுரண்டி வந்தவர்கள் அல்ல. இவ்வாறு அவர் பேசினார்.