ஓபிஎஸ் மகன்கள் உட்பட 18 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம்!

ஓபிஎஸ்சின் இரு மகன்கள் உட்பட அவரது ஆதரவாளர் 18 பேரை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து, ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு எதிரான அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை வானகரத்தில் ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழூ கூட்டத்தில், ஓபிஎஸ்ஸை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக அதிரடியாக அறிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கட்சியின் பொருளாளர் பதவியும் ஓபிஎஸ்சிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து அவர் சட்டரீதியாக ஒருபுறம் போராடி வந்தாலும் மறுபுறம் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு எதிரான எடப்பாடி பழனிசாமியின் அதிரடி நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன.

ஓபிஎஸ் ஏற்கெனவே கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அவரது மகன்களான ரவீந்திரநாத், ஜெயபிரதீப் உட்பட 18 பேரை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டவர்களில் அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனும் அடங்குவார். இன்று கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களில் 5 பேர் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.