ஆளுநர் ஆர்.என்.ரவி என்பதைவிட ஆர்.எஸ்.எஸ்.ரவி என்பது தான் பொருத்தம்: திருமாவளவன்

தமிழகத்தின் ஆளுநர் ஆர்.என்.ரவி என்பதைவிட ஆர்.எஸ்.எஸ்.ரவி என்பது தான் பொருத்தமாகும் என, விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்து உள்ளார்.

அரியலூர் மாவட்டம், அங்கனூர் கிராமத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான, தொல்.திருமாவளவனின் தந்தையின் நினைவு நாளை ஒட்டி அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் தொல்.திருமாவளவன் கூறியதாவது:-

நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் என்ற பட்டியலை நாடாளுமன்ற சபாநாயகர் வெளியிட்டு உள்ளார். “ஜெயராம், ஸ்ரீராம், பாரத் மாதாஜிகி ஜே” உள்ளிட்ட வார்த்தைகளை தான் பயன்படுத்த வேண்டுமா என்பது குறித்தும் விளக்க வேண்டும். இவ்வகையான நடவடிக்கை எதிர்க்கட்சிகளில் குரல் வளையை நெரிக்கும் செயலாக உள்ளது.

பெரியார் பல்கலைக் கழகத்தின் நடைபெற்ற தேர்வில் தமிழகத்தில் மிக தாழ்ந்த ஜாதி என கேட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. ஜாதி இல்லை எனக் கூறி வரும் நிலையில் இது சனாதனத்தின் உச்சமாக கருதப்படுகிறது. இதற்கு காரணமான பல்கலைக்கழக துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தின் ஆளுநர் ஆர்.என்.ரவி என்பதைவிட ஆர்.எஸ்.எஸ்.ரவி என்பது தான் பொருத்தமாகும். அவரது செயல்பாடு ஒட்டுமொத்த தேசத்திற்கும் அச்சுறுத்தலாக உள்ளது. நாம் பயன்படுத்தக் கூடிய அனைத்து பொருளுக்கும், சேவைக்கும் வருங்காலங்களில் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். இதனால் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி இந்தியாவிலும் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. இலங்கையில் சிங்கள மக்களுக்காக எனக்கூறி ஆட்சி செய்த ராஜபக்சேவை சிங்கள மக்களே அடித்து துரத்தி உள்ளதை நாம் கண்டு வருகிறோம். அதே நிலைமை இந்து மக்களுக்காக ஆட்சி செய்வதாக கூறும் பாஜக அரசை இந்து மக்களே ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்தும் காலம் வரும். இவ்வாறு அவர் கூறினார்.