சக போலீசார் 3 பேரை சுட்டுக்கொன்ற போலீஸ் சரணடைந்தார்!

மனைவி பற்றி தவறாக பேசியதால் ஆத்திரமடைந்த போலீஸ்காரர் உடன் பணிபுரியும் 3 போலீசாரை சுட்டுக்கொன்றார்.

தலைநகர் டெல்லியில் ஹைதர்பூர் மாவட்டத்தில் நீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. இந்த நிலையத்தில் இந்திய ரிசர்வ் பட்டாலியன் போலீஸ் பிரிவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில், சிக்கிம் மாநிலத்தை சேர்ந்த போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதற்கிடையில், நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள சிக்கிம் போலீஸ் பிரிவில் லன்ஸ் நாயக் பிரபின் ராய் (வயது 32) என்பவரும் பணியாற்றி வருகிறார். அவருடன் சேர்ந்த்து அதே மாநிலத்தை சேர்ந்த மேலும் சில போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அதேவேளை, பிரபின் ராயின் மனைவி குறித்து அவருடன் வேலை செய்துவந்த சக போலீசார் தவறாக பேசியுள்ளனர். இதை பிரபின் கண்டித்தபோதும் தொடர்ந்து அவ்வாறு பேசி வந்துள்ளனர். இதன் காரணமாக பிரபின் மிகுந்த மன உளைச்சல் அடைந்துள்ளார்.

இந்நிலையில், மிகுந்த மன உளைச்சலில் இருந்த பிரபின் ராய் தன் மனைவி குறித்து தவறாக பேசிய சக போலீசார் 3 பேரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். மேலும் ஒரு போலீசை பிரபின் சுட முயற்சித்தபோது அவர் தப்பிச்சென்றுவிட்டார். மனைவி குறித்து தவறாக பேசிய சக போலீசார் 3 பேரை சுட்டுக்கொன்ற பிரபின் ராய் போலீசில் சரணடைந்தார்.