தி.மு.க. அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது?: எடப்பாடி பழனிசாமி

9 லட்சம் டன் ரேஷன் அரிசி வீணான விவகாரத்தில் தி.மு.க. அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது? என்று அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

தி.மு.க. ஆட்சியில் சுமார் 9 லட்சம் டன் ரேஷன் அரிசி புழுத்துப்போய் பாழாய் போனதாக மத்திய அரசின் இந்திய உணவு கழகம் ஆதாரத்துடன் குற்றம் சாட்டி உள்ளது. அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை உரிய நேரத்தில் கொள்முதல் செய்யாத காரணத்தால் அவை மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் போவதால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது. எனவே விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று நான் சட்டமன்றத்திலும், பேட்டி, அறிக்கைகள் வாயிலாகவும் பலமுறை இந்த அரசின் கவனத்துக்கு கொண்டு வந்தேன். அப்படி இருந்தும் இந்த ஆட்சியாளர்கள் அலட்சியப்படுத்தினார்கள்.

நான் இந்த அவலங்களை சுட்டிக்காட்டிய போதெல்லாம் எனக்கு பதில் அளிப்பது என்ற போர்வையில் ‘சால்ஜாப்பு’ வார்த்தைகளை சொல்வதில் காட்டிய அக்கறையை இந்த அரசின் உணவுத்துறை அமைச்சர் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்த நெல்லை பாதுகாப்பதில் காட்டவில்லை. தன்னுடைய நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி, தன்னுடைய ரத்தத்தை நெல் மணிகளாக விளைவித்து, இந்த அரசின் கைகளில் கொடுத்த அப்பாவி விவசாயிகள் தங்கள் உழைப்பை இந்த அரசு வீணடித்துவிட்டதே என்று எண்ணி, எண்ணி ரத்தக்கண்ணீர் வடிக்கிறார்கள்.

இந்த அரசின் முதல்-அமைச்சர் கடந்த மாதம் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, பெண்கள் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்ட புழுத்த அரிசியை அவரிடம் காட்டி கோஷமிட்டனர். மேலும் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி தரம் இல்லாமல் உண்ண முடியாத நிலையில் இருப்பதால் வெகுண்டெழுந்த மக்கள் மத்திய அரசுக்கு அனுப்பிய புகார் அடிப்படையில் இந்திய வாணிபக்கழக அதிகாரிகள் டெல்டா மாவட்டங்களில் உள்ள அரசுக்கு சொந்தமான குடோன்களில் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் மூலம் 9 லட்சம் டன் அதாவது சுமார் 92 கோடி கிலோ அரிசி மக்கள் பயன்படுத்துவதற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளதை கண்டுபிடித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

தற்போது கால்நடைகள் கூட உண்ண முடியாத தரமில்லாத இந்த அரிசியை ரேஷன் கடைகள் மூலம் அப்பாவி மக்களின் தலையில் கட்ட தி.மு.க. அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது. தொட்டதற்கு எல்லாம் மத்திய அரசை குறை சொல்வதும், அத்தியாவசியப் பொருட்கள், சொத்து வரி, வீட்டு வரி, மின் கட்டணம் போன்றவற்றை தன்னிச்சையாக உயர்த்தும்போது, மத்திய அரசு ஆணையிட்டதால்தான் உயர்த்தினோம் என்று கூறி கண்ணாமூச்சி ஆட்டம் காட்டும் இந்த அரசு, மத்திய அரசின் இந்திய உணவு கழகம் புழுத்து பாழாய் போன அரிசியை பற்றி கூறியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு என்ன பதில் அளிக்கப்போகிறது?. கோடிக்கணக்கான கிலோ அரிசி பாழாய் போனதற்கு இந்த அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது? அலட்சியம், நிர்வாக திறமையின்மை காரணமாக சுமார் 9 லட்சம் டன் அரிசிக்கு உண்டான பல கோடி ரூபாய் பண இழப்பை தி.மு.க. அரசு என்ன செய்ய போகிறது?. இதே போன்று தமிழகம் முழுவதும் எத்தனை லட்சம் டன் அரிசி வீணாகி உள்ளது என்பதையும் இந்திய உணவு கழகம் ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.