ஆள் இல்லாத கடையில் டீ ஆத்துவது போல ஓபிஎஸ் ஆட்களை நியமிக்கிறார்: ஜெயக்குமார்

ஆள் இல்லாத கடையில் டீ ஆத்துவது போல ஓ.பன்னீர்செல்வம் ஆட்களை நியமிக்கிறார் என்று ஜெயக்குமார் கூறினார்.

அதிமுகவில் தொடர் குழப்பம் நீடித்து வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியாக பொறுப்பாளர்களை நியமித்தும், நீக்கம் செய்தும் வருகின்றனர். இந்நிலையில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளராக ஆர்.வைத்திலிங்கம் நியமிக்கப்படுவதாக ஓ.பி.எஸ். அறிவித்துள்ளார். மேலும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களையும் நீக்கம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

துணை ஒருங்கிணைப்பாளர்களாக கு.ப.கிருஷ்ணன், ஜேடிசி பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதிமுகவிலிருந்து சிறுணியம் பலராமன், எம்.சி.சம்பத், சொரத்தூர் ராஜேந்திரன், பாலகிருஷ்ண ரெட்டி, உடுமலை ராதாகிருஷ்ணன், ரவிச்சந்திரன், ராஜேந்திர பாலாஜி, கிருஷ்ணமுரளி, கடம்பூர் ராஜு, வி.எஸ்.சேதுராமன் உட்பட 10 பேரை நீக்குவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆள் இல்லாத கடையில் டீ ஆத்துவது போல ஓ.பன்னீர்செல்வம் ஆட்களை நியமிக்கிறார் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் கூறியதாவது:-

தி.மு.க ஆட்சியில் சொத்து வரி, மின்சார கட்டணம் உயர்ந்துள்ளது. தி.மு.க. அரசை கண்டித்து, சென்னையில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதுதொடர்பாக, அ.தி.மு.க. அமைப்பு சார்பில் 9 மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை செய்துள்ளோம். பெண்களுக்கு உதவித் தொகை, கல்வி கடன் ரத்து உள்ளிட்ட தி.மு.க. அளித்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. இந்த அரசு விளம்பரத்துக்கு கோடிக்கணக்கில் பணம் செலவு செய்கிறது. நாங்கள் கொண்டு வந்த திட்டத்திற்கு லேபிள் ஓட்டுகின்றனர்.

பெட்ரோல், டீசல் விலையை தி.மு.க. அரசு குறைக்க வேண்டும். திமுக அரசு பொறுப்பேற்ற பின் சொத்துவரி, விலைவாசி, மின் கட்டண உயர்வு காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஊர்தோறும் சிலை வைப்பதற்கு, நினைவுச்சின்னம் அமைக்க பணம் இருக்கிறது. ஆனால் மக்கள் நலத்திட்டங்களுக்கு பணமில்லை என்கிறது திமுக. விளம்பரம் மற்றும் கருணாநிதி புகழுக்காக மட்டுமே கோடி கோடியாக செலவு செய்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

ஓ.பன்னீர் செல்வம் அ.தி.மு.க.வுக்கு புதிய நிர்வாகிகளை நியமிப்பது குறித்த கேள்விக்கு, “ஆள் இல்லாத கடையில் டீ ஆத்துவது போல ஓ.பன்னீர்செல்வம் ஆட்களை நியமிக்கிறார்” என்று ஜெயக்குமார் கூறினார்.