விவசாயிகளின் துன்புறுத்தல் இரட்டிப்பு: ராகுல் காந்தி!

இந்தாண்டு விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு ஆகாமல், துன்புறுத்தல் தான் இரட்டிப்பு ஆகி இருக்கிறது என காங்கிரஸ் எம்.பி., ராகுல் விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி., ராகுல், மத்திய பா.ஜ., அரசை அவ்வப்போது விமர்சனம் செய்து வருகிறார். விலைவாசி உயர்வு, பணவீக்கம், ஜிஎஸ்டி உயர்வு உள்ளிட்ட பல பிரச்னைகளை விமர்சித்தும், மத்திய அரசை குற்றம் சாட்டி வருகிறார். இந்த நிலையில் இன்று, ராகுல் காந்தி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

பிரதமரின் “விவசாயிகள் துன்புறுத்தல்” திட்டத்தில் இறந்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவில்லை, இறந்தவர்கள் குறித்து தரவுகள் இல்லை, ‛நண்பர்களுக்கு’ கடன் தள்ளுபடி ஆனால் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடியில்லை, குறைந்தபட்ச ஆதார விலை என்னும் பொய் வாக்குறுதி, பயிர் பாதுகாப்பு என்ற திட்டத்தின் பெயரில் காப்பீடு நிறுவனங்கள் ரூ.40 ஆயிரம் கோடி லாபம் பெறுகின்றன. 2022ல் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு ஆக்கி இருக்கவேண்டும். ஆனால் துன்புறுத்தல் தான் இரட்டிப்பு ஆகி இருக்கிறது. இவ்வாறு அவர் விமர்சித்துள்ளார்.