முதியோர் ஓய்வூதியத் தொகை பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை குறைப்பு: டிடிவி

ஆதரவற்ற முதியோர் ஓய்வூதியத் தொகை பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையை தமிழக அரசு குறைத்து வருவதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

ஆதரவற்ற முதியோர் ஓய்வூதியத் தொகை பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையைக் குறைத்தும், அத்திட்டத்தின் கீழ் புதிய பயனாளிகள் சேர்க்கப்படுவதை நிறுத்தியும் வைத்திருக்கும் திமுக அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திமுகவின் தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட எத்தனையோ வாக்குறுதிகளைப்போல முதியோர் ஓய்வூதியத்தொகை ரூ.1,000லிருந்து ரூ.1,500ஆக உயர்த்தப்படும் என்ற வாக்குறுதியும் காற்றில் பறந்துபோய் விட்டது. உறுதியளித்தபடி உதவித்தொகையை உயர்த்தவில்லை என்றாலும், ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்ததை குறைப்பதும், புதியவர்களுக்கு வழங்க மறுப்பதும் பச்சை துரோகமாகும்.

முந்தைய பழனிசாமி அரசு ஆரம்பித்து வைத்த ஏழை, எளிய முதியோரை வஞ்சிக்கும் இந்தப் படுபாதகத்தை ஸ்டாலின் அரசும் தொடர்வது வேதனைக்குரியது. இதனால்தான், மக்களை வஞ்சிப்பதில் பழனிசாமியும், ஸ்டாலினும் ஒன்று எனச் சொல்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.