மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்தால் கடும் நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின்!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை குருநானக் கல்லூரி பொன் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

கொரோனாவால் தொண்டை பாதித்து இருந்தாலும் தொண்டு பாதிக்கக்கூடாது என்பதற்காக எனது பணியை ஆற்றி வருகிறேன். குருநானக் கல்லூரி பொன் விழாவில் கலந்து கொள்ள எனக்கு எல்லா உரிமையும் உண்டு.1971ல் கல்லூரி தொடங்கிய போதும் ஆட்சியில் இருந்தது திமுக தான். கல்லூரிக்காக 25 ஏக்கர் நிலத்தை ஒதுக்கினார் கலைஞர். கலைஞர் ஒதுக்கியது வீண்போகவில்லை என்பதை குருநானக் கல்லூரியின் பொன்விழா நிரூபித்துள்ளது. கலைஞர் தொடங்கிய எதுவும் சோடை போனதாக வரலாறு இல்லை என்பது மீண்டும் நிரூபணம். சென்னை மேயராக 2 முறை பொறுப்பு வகித்த போதும் குருநானக் கல்லூரி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன். சிறுபான்மையினராக உள்ள சீக்கிய மக்கள் ஆற்றி வரும் கல்விப்பணி பெரும்பான்மையினரை விட மகத்தானது. குருநானக் கல்லூரி அனைத்து தரப்பு மக்களும் பயிலக்கூடிய கல்லூரியாக இருந்து வருகிறது.

மாணவிகளுக்கு எதிரான செயல்களை அரசு வேடிக்கை பார்க்காது. சமீப காலமாக நடந்த சில நிகழ்வுகள் என்னை மன வேதனை அடையச் செய்தன. கல்வி நிறுவனங்களில் பாலியல் தொல்லை புகார் எழுந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகளை வருமான நோக்கத்தில் நடத்தக் கூடாது. கல்வி நிறுவனம் நடத்துவோர் தொழில் வர்த்தகமாக இல்லாமல் தொண்டாக நினைக்க வேண்டும். மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது. தற்கொலை எண்ணத்தை மாணவர்கள் கைவிட வேண்டும். ஆசிரியர்கள், பெற்றோருடன் மனம் விட்டு பேசுங்கள். எத்தகைய சோதனைகளையும் எதிர்கொள்ள ஆற்றல் பெற்றவர்களாக தமிழக மாணவர்கள் விளங்க வேண்டும். தொல்லைகள், அவமானத்தை மாணவிகள் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். “பாதகம் செய்வோரைக் கண்டால் பயம் கொள்ளல் ஆகாது பாப்பா. மோதி மிதித்து விடு பாப்பா. அவர்கள் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா”. இவ்வாறு அவர் பேசினார்.