ஜபல்பூர் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் பலி!

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் தனியார் மருத்துவமனையில் நிகழ்ந்த தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜபல்பூர் அருகே உள்ள கோஹல்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மல்டி ஸ்பெலாட்டி தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் இன்று பிற்பகலில் தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவமனை முழுவதும் தீ மளமளவென பரவி கொளுந்து விட்டு எரிந்தது. இந்த தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்துள்ள பலர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உயிரிழந்த 10 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.