என்.டி.ராமா ராவின் இளைய மகள் உமா மகேஷ்வரி தூக்கிட்டு தற்கொலை!

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராமா ராவின் இளைய மகள் கந்தமனேனி உமா மகேஷ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், மறைந்த பிரபல நடிகருமான என்.டி.ராமா ராவின் இளைய மகள், கந்தமனேனி உமா மகேஷ்வரி, தெலங்கானா மாநிலத் தலைநகர் ஐதராபாத்தில் உள்ள வீட்டில் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். அவர் கடந்த சில நாட்களாக உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

என்டிஆர் என அழைக்கப்படும் என்.டி.ராமா ராவுக்கு மொத்தம் 12 குழந்தைகள். அதில் இளைய மகள் உமா மகேஷ்வரி. மேலும் நான்கு சகோதரிகளில் அவர் இளையவர். முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக தலைவருமான டக்குபதி புரந்தேஸ்வரியும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடுவின் மனைவியுமான நாரா புவனேஸ்வரி, உமா மகேஷ்வரியின் சகோதரிகள். உமா மகேஷ்வரியின் தற்கொலை குறித்து தகவல் அறிந்த சந்திரபாபு நாயுடு, அவரது மகன் நாரா லோகேஷ் உள்ளிட்டோர், அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர்.