யங் இந்தியா அலுவலகத்திற்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் சீல்!

டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு கட்டடத்தில் செயல்படும் யங் இந்தியா அலுவலகத்திற்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்ட பத்திரிகை நேஷனல் ஹெரால்டு. இந்த பத்திரிகையை ‘அசோசியேட்டட் ஜர்னல்ஸ்’ நிறுவனம் நடத்தி வந்தது. இதனிடையே, அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனம் நிதி பற்றாக்குறையில் தவித்ததால், அந்நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி 90 கோடியே 25 லட்சம் ரூபாயை வட்டியில்லா கடனாக கொடுத்தது. அந்த கடனை அசோசியேட்டட் நிறுவனம் திருப்பி செலுத்த முடியாததால், அதன் பங்குகளை காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை இயக்குனர்களாக கொண்ட யங் இந்தியா நிறுவனம் வாங்கிக் கொண்டது. இதன் மூலம் வெறும் 50 லட்சம் ரூபாய் மூலதனத்தில் தொடங்கப்பட்ட யங் இந்தியா நிறுவனம், 90 கோடி ரூபாய் கடனுக்காக அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனத்தின் 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள், பங்குகளை பெற்றுக் கொண்டதாகவும், இதில் முறைகேடு இருப்பதாகவும் கூறி, பாஜக மூத்தத் தலைவர் சுப்பிரரமணியன் சாமி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இதில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக, அமலாக்கத் துறை கடந்தாண்டு இறுதியில் வழக்குப் பதிவு செய்தது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, பவன் பன்சால் ஆகியோரிடம், ஏற்கனவே விசாரணை நடந்தது. இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவரது மகனும், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் ஆகியோரையும் அமலாக்கத் துறை விசாரித்தது. இதை எதிர்த்து நாடு முழுதும் காங்கிரஸ் போராட்டம் நடத்தியது. இதற்கிடையே நேற்று, தலைநகர் டெல்லியில் உள்ள ஐ.டி.ஓ.,வில் அமைந்திருக்கும் நேஷனல் ஹெரால்டு அலுவலகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய 12 இடங்களில் சோதனை நடத்தினர்.

இந்நிலையில் இன்று, டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு கட்டடத்தில் செயல்படும் யங் இந்தியா நிறுவனத்தின் அலுவலகத்திற்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டினர். மேலும், தங்களின் அனுமதியின்றி அலுவலகத்தை திறக்கக் கூடாது எனவும் உத்தரவிட்டு உள்ளனர். இதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இதே போல், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வீட்டின் முன்பும் அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். அமலாக்கத் துறையின் இந்த நடவடிக்கைக்கு, காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.