டெண்டர் முறைகேடு: எடப்பாடி பழனிசாமி மீதான சி.பி.ஐ. விசாரணை ரத்து!

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கை சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

தமிழகத்தில் கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தின் போது நெடுஞ்சாலைத் துறை மூலம் சாலை மற்றும் சாலை சீரமைப்பு பணிக்கான டெண்டர் வழங்கியதில் ரூ.4,800 கோடி அளவுக்கு முறைகேடு நடந்ததாகவும், இது தொடர்பாக 2018-ம் ஆண்டில் அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தக் கோரியும் சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா இந்த விவகாரத்தை சி.பி.ஐ. விசாரிக்க கடந்த 2018-ம் ஆண்டு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதே போல் எடப்பாடி பழனிசாமியும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்திருந்தார். கடந்த 2018-ம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு எடப்பாடி பழனிசாமி மீதான புகாரை சி.பி.ஐ. விசாரிக்க இடைக்கால தடை விதித்தது. இதையடுத்து இந்த வழக்கு நிலுவையில் இருந்து வந்தது. சுமார் 4 ஆண்டு காலம் விசாரணை நடத்தப்படாமல் நிலுவையில் இருந்து வரும் இந்த மேல் முறையீட்டு வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை கோரிக்கை வைத்தது. இந்த கோரிக்கையை ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு இந்த வழக்கை இன்று விசாரிப்பதாக அறிவித்திருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா மற்றும் நீதிபதிகள் கிருஷ்ண முராரி, ஹிமா கோலி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரியமா சுந்தரம், ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கில் ஒரு தரப்பாக தாங்கள் இல்லாத நிலையில் உயர்நீதிமன்றம் எந்த கருத்தையும் கேட்காமல் ஒருசாரரின் கருத்தை கேட்டு உத்தரவை பிறப்பித்துள்ளது. எனவே உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

இதனையடுத்து தலைமை நீதிபதி, இந்த வழக்கில் எதிர்மனுதாரரான ஆர்.எஸ்.பாரதி சி.பி.ஐ விசாரணை தான் வேண்டும் என்று கோருகிறீர்களா? என கேட்டனார். அதற்கு பதிலளித்த ஆர்.எஸ்.பாரதி தரப்பு மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், இந்த வழக்கை சி.பி.ஐ தான் விசாரணை செய்ய வேண்டுமென்று இல்லை, ஆனால் சுதந்திரமான ஒரு விசாரணை நடைபெற வேண்டும் அது எந்த அமைப்பாக இருந்தாலும் ஆட்சேபம் இல்லை என கூறினார்.

இதனையடுத்து உத்தரவு பிறப்பித்த தலைமை நீதிபதி அமர்வு, எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கை சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது. அதேவேளையில் இந்த விவகாரத்தில் சீலிடப்பட்ட கவரில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட விசாரணை அறிக்கையை முதலில் சென்னை உயர்நீதிமன்றம் தீர ஆய்வு செய்து, அதன்பின்னர் வழக்கை விசாரித்து உரிய முடிவெடுக்க வேண்டும் எனவும் குறிப்பாக வழக்கை விசாரித்த பின்னர் இந்த விவகாரத்தை எந்த அமைப்பு விசாரணை நடத்த வேண்டும் என்பதை உயர்நீதிமன்றம் முடிவு செய்யலாம் எனவும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.