போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு குறித்து பேச்சுவார்த்தை!

போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு 14ஆவது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர், “கடந்த ஆட்சியில் தொழிலாளர் ஊதிய விகிதம் ஜூனியர், சீனியர் வேறுபாடின்றி மாற்றி அமைக்கப்பட்டதை களைய பே மேட்ரிக்ஸ் அமல்படுத்த கோரிக்கை வைத்தனர். அதை ஏற்று கொண்டுள்ளோம். ஆனால் அதை எந்த ஆண்டு முதல் அமல்படுத்துவது என்று முடிவு செய்யவில்லை. அதை நிதித்துறையிடம் கலந்தாலோசித்து முடிவு செய்யவேண்டும். மேலும் ஒப்பந்த பேச்சுவார்த்தை காலத்தை 4 ஆண்டுகால உயர்த்தக் கூடாது என்ற தொழிற்சங்கத்தினர் கோரிக்கை தொடர்பாக நிதித் துறை ஒப்புதல் பெற வேண்டி இருப்பதால் இன்று ஒப்பந்தம் நிறைவேற்றப்படவில்லை. மீண்டும் பேச்சுவார்த்தை மற்றொரு நாளில் நடக்கும்” என்றார்.

அவர் மேலும் கூறுகையில், “தற்போது திட்டமிடப்பட்டுள்ள 4 ஆண்டுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தை நடத்துவதற்கு தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஓய்வு பெற்றோர் அகவிலைப்படி குறித்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்றோம் , அகவிலைப்படி உயர்வு குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. எனவே இன்று அதிகுறித்து முடிவு எட்டப்படவில்லை. போக்குவரத்து துறை லாபத்தில் இயங்காத போதும், பேருந்து பயண கட்டணத்தை உயர்த்த கூடாது என முதலமைச்சர் ஏற்கனவே எங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். போக்குவரத்து தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக்குவது குறித்து தற்போதைய நிதி சூழல் காரணமாக நீண்ட விவாதத்திக்கு பிறகே உரிய முடிவு எடுக்கப்படும்” என்றார்.