மோடியும், அமித்ஷாவும் நாட்டுக்கு என்ன செய்தார்கள்: ராகுல் காந்தி

மோடியும், அமித்ஷாவும் நாட்டுக்கு என்ன செய்தார்கள். மோடியை கண்டு காங்கிரஸ் பயப்படாது என ராகுல் காந்தி கூறியுள்ளார்

டெல்லியிலுள்ள காங்கிரசுக்கு சொந்தமான நேஷ்னல் ஹெரால்ட் அலுவலகத்தை அமலாக்கத் துறை இயக்குனரகம் சோதனை நடத்தி சீல் வைத்தது. முன் அனுமதி இன்றி ஹெரால்டு அலுவலகத்தை திறக்க கூடாது எனவும் அமலாக்கத் துறை இயக்குனரகம் அறிவித்தது. இந்நிலையில் டெல்லியில் காங்கிரஸ் தலைவரான சோனியா மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அமலாக்கத் துறையின் நேஷனல் ஹெரால்டு அலுவலக சோதனை நடவடிக்கை என்பது காங்கிரஸை பயமுறுத்த மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்று பலராலும் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இன்று நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி கூறியதாவது:-

பிதமர் நரேந்திர மோடியைக் கண்டு நாங்கள் பயப்படவில்லை. அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். நாட்டையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்கவும், நாட்டில் நல்லிணக்கத்தைப் பேணவும் நான் தொடர்ந்து பாடுபடுவேன். அவர்கள் என்ன செய்தாலும் எனது பணியைத் தொடர்ந்து செய்வேன். எங்கள் மீது சில அழுத்தம் கொடுப்பதன் மூலம் எங்களை அடக்கிவிட முடியும் என்று பாஜக அரசு நினைக்கிறது. ஆனால் நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். நரேந்திர மோடியும், அமித்ஷாவும் இந்த நாட்டிற்காக என்ன செய்கிறார்கள். ஜனநாயகத்துக்கு எதிராக அவர்கள் என்ன செய்தாலும் நாங்கள் அதற்கு எதிராக நிற்போம். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியதில் இருந்தே விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி. வரி உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து இரு அவைகளையும் எதிர்க்கட்சிகள் முடக்கி வந்தன. பாராளுமன்ற மக்களவை இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. காங்கிரஸ் உள்ளிடட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பல்வேறு பிரச்சினைகளை முன் வைத்து கோஷங்களை எழுப்பினார்கள். நேஷனல் ஹெரால்டு நிதி முறைகேடு வழக்கு தொடர்பாக டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு தலைமை அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள யங் இந்தியா நிறுவனத்தின் ஆபீசுக்கு அமலாக்கத்துறையினர் தற்காலிகமாக சீல் வைத்தனர். காங்கிரஸ் எம்.பி.க்கள் இதை முன்வைத்து அவையில் பிரச்சினையை கிளப்பினார்கள். சபையின் மைய பகுதிக்கு வந்த அவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள். அமலாக்கத்துறையை அரசு தவறாக பயன்படுத்துவதாக கூறி அமளியில் ஈடுபட்டனர். இதே போல் ஜி.எஸ்.டி. உள்பட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்தும் அவர்கள் அமளியில் ஈடுபட்டனர். இந்த அமளி காரணமாக அவை 11.30 மணிவரை ஒத்திவைக்கப் பட்டது. பின்னர் அவை கூடியதும் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். அவையை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டதால் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

மேல்சபையிலும் காங்கிரஸ் உறுப்பினர்கள் இதே பிரச்சினையை முன்வைத்து கோஷங்களை எழுப்பினார்கள். விசாரணை அமைப்புகளை அரசு தவறாக பயன்படுத்துவதாக கங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம் சாட்டினார். இதற்கு பா.ஜனதா உறுப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் விடுத்த கோரிக்கையை அவை தலைவர் நிராகரித்தார். இதனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு பிரச்சினைகளை முன் வைத்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் தொடர் முழுக்கம் காரணமாக பாராளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.