இந்தியர்களை சோதனை எலிகளாகப் பயன்படுத்துவதற்கு அரசு ஊக்குவிக்கிறதா?: ரவிக்குமார் எம்.பி.

இந்தியாவில் கிளினிக்கல் ட்ரயல்ஸ் எண்ணிக்கை அதிகரிப்பது ஏன் என்று ரவிக்குமார் எம்.பி ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளார்.

புதிய மருத்துவ முறை அல்லது மருந்து சோதனைகளுக்காக சிலர் பயன்படுத்தப்படுகின்றனர். அவர்களுக்கு அந்த மருந்தை அல்லது உபகரணத்தை அளித்து சோதனை செய்து அதன் ஆய்வின் முடிவில் அந்த மருந்து பயன்பாட்டுக்கு வரும். இதையே கிளினிக்கல் ட்ரயல் என்கிறார்கள்.

இந்தியாவில் கிளினிக்கல் ட்ரயல்ஸ் எண்ணிக்கை அதிகரித்து வருவது ஏன் என்று மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளார். அதில், “2016-2021 க்கு இடையில் இந்தியாவில் செய்யப்பட்ட கிளினிக்கல் ட்ரயல்ஸ்களின் எண்ணிக்கை கற்பனை செய்ய முடியாத அளவு அதிகரித்துள்ளது.
CTRI இன் தரவுகளின்படி 2011 மற்றும் 2020 க்கு இடையில், 28,196 சோதனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன – 2020 இல் மட்டும் 7,467 சோதனைகள் நடந்துள்ளன. கடந்த பத்து ஆண்டுகளில், கிளினிக்கல் ட்ரயல்ஸ் காரணமாக 311 பங்கேற்பாளர்கள் இறந்துள்ளனர், 22,176 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய அளவுக்கு ஆபத்தான பக்க விளைவுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை மிகவும் குறைவு. இதனால் பல பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் கிளினிக்கல் ட்ரயல்ஸை மேற்கொள்வதற்கு இந்தியாவை தேர்வு செய்கின்றன. இந்த விவகாரம் அவசரமாக விவாதிக்கப்பட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரவிக்குமார், “கிளினிக்கல் ட்ரயல்ஸ் நடத்துவதற்கான விதிகளை பாஜக அரசு 2019 இல் திருத்தியது. கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் ஏராளமான சோதனைகள் இந்தியாவில் நடந்திருப்பதைப் பார்க்கும்போது அதற்கெனவே விதிகள் திருத்தப்பட்டனவா என்ற ஐயம் எழுகிறது. இந்தியர்களை சோதனை எலிகளாகப் பயன்படுத்துவதற்கு ஒன்றிய அரசாங்கமே ஊக்குவிக்கிறதா? இதில் உயிரிழப்பவர்களுக்கு சராசரியாக 8 லட்சம் ரூபாய் அளவுக்குத்தான் இழப்பீடு வழங்கப்படுகிறது. இதை உயர்த்துவதற்கு ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்” என கூறியுள்ளார்.