தேசியக் கொடி ஏற்றும்படி திமுக தொண்டர்களுக்கு முதல்வர் சொல்ல வேண்டும்: அண்ணாமலை

திமுகவினர் வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றுமாறு கட்சியினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்த வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்ட பாஜக சார்பில் தேசிய கொடி குறித்து மாபெரும் விழிப்புணர்வு பேரணி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. ஆவடி மாநகராட்சியில் துவங்கிய பேரணியில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் இந்திய தேசியக் கொடியை கைகளில் ஏந்தி ஊர்வலமாக சென்றனர். கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது:-

மக்கள் எழுச்சியுடன் தேசிய கொடியை கையில் ஏந்தி நடைபயணத்தை மேற்கொண்டுள்ளோம். தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்களிடையே தேசிய பற்று குறித்து போட்டிகள் நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் தேசிய கொடியை ஏற்றும் இயக்கத்தை முன்னெடுப்பது அவசியம். தமிழகத்தில் உள்ள வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்ற அறிவிப்பை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட வேண்டும். அதேபோல் தி.மு.க. தொண்டர்களையும் தேசிய கொடி ஏற்றும்படி மு.க.ஸ்டாலின் சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.