இந்த உலகம் தடுப்பூசி என்ற பெயரில் தவறாக வழிநடத்தப்படுகிறது: பாபா ராம்தேவ்

இந்த உலகம், மருத்துவ அறிவியலால், தடுப்பூசி என்ற பெயரில் தவறாக வழிநடத்தப்படுகிறது என்று,
தடுப்பூசி குறித்து பாபா ராம்தேவ் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

அவ்வபோது மருத்துவத்திற்கு எதிராக பேசி சர்ச்சையில் சிக்கி வருகிறார் பாபா ராம்தேவ். சில மாதங்களுக்கு முன்பாக நவீன அலோபதி முட்டாள்தனமானது என்று பாபா ராம்தேவ் பேசியது பெரும் கண்டனத்தை எழுப்பியது. இதற்கு இந்திய மருத்துவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்தது. பாபா ராம்தேவ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்திய மருத்துவர்கள் சங்கம் சார்பில் அறிக்கை அப்போது வெளியிடப்பட்டது.

இந்நிலையில் பாபா ராம்தேவ் மீண்டும் தனது கருத்தால் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஹரித்துவாரில் யோகா குரு பாபா ராம்தேவ் நிருபர்களிடம் பேசியபோது, “அமெரிக்க அதிபர் ஜோ பிடன் ஏற்கெனவே இரு தடுப்பூசிகள் செலுத்தியபின்பும், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது” என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ராம்தேவ் தனது பதிலில், “யோகா, ஆயுர்வேதாவின் துணையின்றி, எந்தவிதமான தடுப்பூசியாலும், நோய் எதிர்ப்புச் சக்தியை கொரோனா தொற்றிற்கு எதிராக நிரந்தரமாக வழங்க முடியாது. எவ்வளவு பெரிய ஆளாக நீங்கள் இருந்தாலும், அதிபராக இருந்தால்கூட, மிகப்பெரிய மருத்துவராக இருந்தால்கூட இதுதான் நிலைமை. உலக சுகாதார அமைப்பில் இருக்கும். உயர்ந்த அதிகாரிகள் கூட கொரோனா தடுப்பூசி செலுத்தியபின்பும் கூட மீண்டும் நோய் தொற்றுக்கு ஆளாகிறார்கள். இந்த உலகம், மருத்துவ அறிவியலால், தடுப்பூசி என்ற பெயரில் தவறாக வழிநடத்தப்படுகிறது. இந்த உலகம் யோகா, ஆயுர்வேதாவுக்கு மீண்டும் திரும்பும். மக்கள் துளசியைப் வளர்ப்பார்கள், கற்றாழையை தோட்டத்தில் வளர்ப்பார்கள், தங்கள் உடல்நலத்தைப் பெறுவார்கள்” எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, ரெசிடென்ட் டாக்டர்ஸ் பெடரேஷன் அமைப்பு பிரதமர் மோடிக்கு ராம்தேவ் பேச்சு குறித்து புகார் கடிதம் எழுதியுள்ளது. அலோபதி மருத்துவம் குறித்து ஆதாரமற்ற பேச்சுகளை பேசுவது மக்கள் அதன் மீதான நம்பிக்கையை இழக்க வைக்கும் என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் ரெசிடென்ட் டாக்டர்ஸ் அசோசியேஷன் கூட்டமைப்பு டுவிட்டர் பக்கத்தில், “மீண்டும், அவதூறான, பொறுப்பற்ற முறையில் அலோபதி மருத்துவம், தடுப்பூசி குறித்து ராம்தேவ் பேசியுள்ளார். இதை கனிவுடன் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் கவனத்துக்கு கொண்டு வருகிறோம். இதன் மீது கடினமான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய ஆராய்ச்சி, கடின உழைப்பு, நவீன மருத்துவம் ஆகியவை மீது மரியாதைக்குறைவான போக்கு ஏற்றுக்கொள்ள முடியாது” எனத் தெரிவித்துள்ளது.