திமுக ஆட்சி 14 மாதங்களில் ரூ.20 ஆயிரம் கோடி ஊழல்: எடப்பாடி பழனிசாமி

திமுக ஆட்சி பொறுப்பேற்ற 14 மாதங்களில், 20 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

ஓமலூர் சட்டசபை தொகுதி சார்பில், சேலம் புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் மணி தலைமையில், தீவட்டிப்பட்டியில், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த விழாவில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

சேலம் மாவட்டம் அதிமுக கோட்டை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைக்கு தமிழகத்தில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருக்கலாம். ஆனால் சேலம் மாவட்டத்தில் 11 சட்டமன்றத் தொகுதிகளில் 10 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளோம். சேலம் மாவட்டத்தை பொறுத்தவரைக்கும் அதிமுக தான் இன்றைக்கு ஆட்சியில் இருப்பதாக மக்கள் கருதுகின்றனர். ஜெயலலிதா ஆட்சி முன்னும், மறைவுக்கு பிறகும், நிறைய திட்டங்களை ஓமலூர் பகுதியில் நிறைவேற்றி உள்ளோம். சாலை வசதி, குடிநீர் வசதி, தெரு விளக்கு வசதி, முதியோர் உதவித்தொகை, பட்டா வழங்குவது, கூட்டு குடிநீர் திட்ட மூலம் குடிநீர் வழங்குதல் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அதிகமாக ஏழைகள் வசிக்கும் பகுதியில் அம்மா கிளினிக் ஏற்படுத்தி பொது மக்களுக்கு சிகிச்சை ஏற்பாடு செய்த அரசாங்கம் ஜெயலலிதா அரசாங்கம். இதை பொறுத்துக் கொள்ள முடியாத ஸ்டாலின், அதிமுக கொண்டு வந்த திட்டம் என்பதாலும் மக்களிடம் அதிக அளவில் வரவேற்பு இருப்பது என்று எண்ணி அதை மூடி உள்ளனர். நல்ல நல்ல திட்டங்களை மூடு விழா நடத்துவதற்கு தான் இந்த அரசாங்கம் வந்ததே தவிர, மக்களுக்கு நன்மை செய்ய வரவில்லை. இந்த ஆட்சி மக்கள் விரோத ஆட்சி.

மக்கள் நலன் சார்ந்து அ.தி.மு.க கொண்டு வந்த நல்ல திட்டங்களை எல்லாம் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். அ.தி.மு.க. அரசு தாலிக்கு தங்கம் திட்டத்தின் கீழ் ஏழைப் பெண்களுக்கு 1 பவுன் தங்க தாலி, 50 ஆயிரம் ரூபாய் தொடர்ந்து வழங்கியது. ஆனால் ஸ்டாலின் தலைமையில் இருக்கும் தி.மு.க. அரசுக்கு , ஏழை பெண்களுக்கு இந்த திட்டம் கிடைப்பதை கூட பொறுத்துக் கொள்ளமுடியவில்லை. ஒரு பவுன் 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாவதாக கூறி அந்த திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளனர். அதேபோல் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி திட்டத்தை ஜெயலலிதா கொண்டு வந்தார். அதையும் நிறுத்திவிட்டனர் இந்த ஆட்சி மக்கள் விரோத ஆட்சி.

முதலில் கருணாநிதி , அதன் பிறகு ஸ்டாலின், அதன் பிறகு உதயநிதி, அதன் பிறகு இன்பநிதி . இது என்ன அரச பரம்பரையா?. வேறு யாராவது முதல்-அமைச்சரானால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அப்படிப்பட்ட கட்சி தான் தி.மு.க., அது கட்சி அல்ல, கார்ப்பரேட் கம்பெனி. குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பதவியில் உள்ளனர். இந்த மக்கள் விரோத ஆட்சி விரைவில் வீட்டுக்கு போவது உறுதி. அனைத்து துறைகளிலும் கடந்த 14 மாத காலங்களில் தி.மு.க. ரூ. 20 ஆயிரம் கோடி ஊழல் செய்துள்ளது. எனவே இந்த ஆட்சியை அகற்றி விட்டு அம்மாவுடைய ஆட்சி மலர அனைவரும் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.