ஜனதா தள பரிவாரங்கள் ஒரே குடையின் கீழ் இணைய வேண்டும்: தேவகவுடா

ஜனதா தள பரிவாரங்கள் ஒரே குடையின் கீழ் இணைய வேண்டும் என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா தெரிவித்துள்ளார்

பீகார் மாநிலத்தில் பாஜக – ஐக்கிய ஜனதாதளம் ஆகிய கட்சிகளின் கூட்டணி உடைந்துள்ளது. முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு எதிராக பீகார் மாநில பாஜக நிர்வாகிகள் செயல்பட்டு வந்ததால் இரு கட்சிகளுக்கும் இடையே விரிசல் நிலவி வந்த நிலையில், கூட்டணி உடைந்துள்ளது. நிதிஷ்குமாருக்கு வலது கரமாக திகழ்ந்த ஆர்.பி.சிங்கை வைத்து ஆட்சியையும், கட்சியையும் உடைக்க பாஜக திட்டமிடுவதாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர் குற்றம் சாட்டி வந்ததற்கிடையே, பாஜக உடனான கூட்டணியை முறித்து கொள்வதாக நிதிஷ் குமார் அறிவித்தார். இதையடுத்து, தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிதிஷ் குமார், ஆர்ஜேடி, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள் அடங்கிய எதிர்க்கட்சிகளின் ஆதரவை கோரினார். அவர்களும் நிஷிஷ் குமாருக்கு ஆதரவளித்தனர்.

கடந்த 2015ஆம் ஆண்டு மெகா கூட்டணி சார்பில் பீகார் முதலமைச்சரான நிதிஷ்குமார் 2017இல் திடீரென பாஜக கூட்டணிக்கு மாறினார். 2020ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு முதல்வரான அவர், இரண்டே ஆண்டுகளில் மீண்டும் பாஜகவை கழற்றி விட்டு மீண்டும் மெகா கூட்டணியில் இணைந்துள்ளார். 2024 மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் இணைய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருவதற்கிடையே, பீகார் மாநில அரசியலில் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளது அதற்கு முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், ஜனதா தள பரிவாரங்கள் ஒரே குடையின் கீழ் இணைய வேண்டும் என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா விருப்பம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “பீகார் அரசியல் நிலவரங்களை கவனித்து வருகிறேன். இந்த தருணத்தின் ஜனதாதள பரிவாரங்கள் ஒரே குடையின் கீழ் இருந்த நாட்களை நினைத்துப் பார்க்க வைத்தது. ஜனதாதளம் கட்சியின் மூன்று பிரதமர்களை நாட்டுக்கு வழங்கியுள்ளது. எனக்கு வயது மூப்படைந்து விட்டது. ஆனால், இதுபற்றி இளைய தலைமுறையினர் முடிவு செய்தால் இந்த தேசத்திற்கு ஒரு நல்ல மாற்றத்தை வழங்க முடியும்.” என்று பதிவிட்டுள்ளார்.

பீகார் மாநிலத்தில் எதிரும்புதிருமாக இருக்கும் ஆர்ஜேடி – ஜேடியு ஆகிய கட்சிகள் 2015 தேர்தலில் கூட்டணி அமைக்க முக்கிய காரணமே பாஜக எதிர்ப்பு மனநிலைதான். அந்த தேர்தலுக்கு பின்னரும் கூட, நிதிஷ் குமார்தான் கூட்டணியில் இருந்து வெளியேறி பாஜகவுடன் கூட்டணி அமைத்தார். தற்போது, நிதிஷ் குமார் மீண்டும் வந்ததும் அவரை அரவணைத்து ஆட்சியை தக்கவைக்க உதவி புரிந்துள்ளனர் எதிர்க்கட்சி கூட்டணியினர். லாலுவின் ஆர்ஜேடி கட்சி தனிப்பெரும்பான்மை கொண்ட கட்சியாக இருக்கும் போதும், ஐக்கிய ஜனதாதளத்தின் நிதிஷ் குமாரையே முதல்வராக தொடர ஆர்ஜேடி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒப்புக் கொண்டுள்ளது கவனம் ஈர்த்துள்ளது.

பீகார் மாநில அரசியல் ஆர்ஜேடி – பாஜக என்று மாறி வரும் சூழலில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளத்துக்கு ஆர்ஜேடி அளித்துள்ள ஆதரவு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த இரு கட்சிகளும் முன்னொரு காலத்தில் இணைந்து பயணித்தன என்பதும், இந்த கட்சிகள் ஜனதாதள கட்சியில் இருந்து உடைந்தது என்பதும் கவனிக்கத்தக்கது. பலம் வாய்ந்த பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் இணைய வேண்டும் என்பது தவிர்க்க முடியாததாகி உள்ளது.