இலவசங்கள் கொடுக்காதீர்கள் என்று உத்தரவிட முடியாது: உச்ச நீதிமன்றம்

இந்தியா போன்ற ஒரு நாட்டில் இலவசங்கள் கொடுக்காதீர்கள் என்று உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், அரசியல் கட்சிகள் இலவசங்களை தேர்தல் வாக்குறுதிகளாக வழங்க கூடாது என்றும், அப்படி வழங்கினால் தேர்தல் ஆணையம் அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், அந்த கட்சிக்கான அங்கீகாரத்தை ரத்து செய்யஉத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். அதேநேரம், ஆம் ஆத்மி உள்ளிட்ட சில கட்சிகள் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பதில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

கடந்த சில ஆண்டுகளாகவே நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் இருந்து வந்த நிலையில், இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. முன்னதாகவே இந்த வழக்கு தொடர்பாக தேர்தல் ஆணையம் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்த நிலையில், அதன் பேரில் தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. வாதங்களைக் கேட்ட பிறகு இந்த வழக்கு குறித்து கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி, இலவசங்களை அறிவிக்கும் கட்சிகளின் பதிவை ரத்து செய்வது ஜனநாயக விரோத செயல் என்றும், ஜனநாயக விரோத செயல் என்பதால் அதனை பரிசீலிக்க மாட்டோம் என்றும் தெரிவித்தனர். இந்தியா போன்றதொரு நாட்டில் இலவசங்களை கொடுக்காதீர்கள் என்று உத்தரவிட முடியாது என்றும் கூறினர்.

இதை கொடுங்கள், இதை கொடுக்காதீர்கள் என்று உத்தரவிட்டால் அதை இந்தியா போன்ற நாட்டில் செயல்படுத்த முடியாது என்றும் கூறிய நீதிபதிகள், அரசியல் கட்சிகள் இலவசங்கள் அறிவிப்பதும் வழங்குவதும் தீவிரமாக பரிசீலிக்கப்பட வேண்டிய ஒன்று என்றார். இலவசங்களும், மக்கள்நலத் திட்டங்களும் வெவ்வெறானவை என்று குறிப்பிட்ட நீதிபதிகள், ஒரு கட்சி ஆட்சிக்கு வரும் முன்னர் மாநில பொருளாதார நிலை என்ன என்பது பற்றி தெரியாது என்றும், மேலும் ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக தவறுகளை செய்யக் கூடாது என்றும் தெரிவித்தனர். இலவசங்களுக்கு செலவிடும் பணத்தை கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணிக்கு பயன்படுத்தலாம் என்று அறிவுறுத்திய நீதிபதிகள், பொருளாதாரம் பாதிக்கப்படாத வகையில் மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும் என்றனர்.

மக்கள் நலத்திட்டங்களுக்கும் இலவசங்களுக்கும் வேறுபாடு உள்ள துஎன்றும் சுட்டிக்காட்டினர். அரசு வழங்கும் இலவசங்கள் பல நேரத்தில் உயிர்காக்கும் அம்சங்களாக உள்ளதாகவும், இலவசங்களை வரைமுறைப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு தான் சட்டம் இயற்ற வேண்டும் என்றும் கூறினர். மேலும் இந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 17ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.