ஜெகதீப் தன்கர் துணைக் குடியரசு தலைவராக பதவியேற்றார்!

குடியரசு துணை தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக கூட்டணி வேட்பாளர் ஜெகதீப் தன்கர் நாட்டின் 14ஆவது துணை குடியரசுத் தலைவராக பதவியேற்றுக்கொண்டார்.

துணை குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், நாடாளுமன்றத்தில் ஆகஸ்ட் 6ஆம் தேதி நடைபெற்றது. இதில், பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் ஜெகதீப் தன்கர் போட்டியிட்டார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் ராஜஸ்தான் ஆளுநருமான மார்கரெட் ஆல்வா போட்டியிட்டார். இதில், பாஜ கூட்டணி வேட்பாளர் ஜெகதீப் தன்கர் 528 வாக்குகளையும், மார்கரெட் ஆல்வா 182 வாக்குகளையும் பெற்றனர். இதன் மூலம், 346 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெகதீப் தன்கர் வெற்றி பெற்றார்.

துணைக் குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து இன்று நாட்டின் 14ஆவது குடியரசு துணை தலைவராக ஜெகதீப் தன்கர் பதவியேற்றார். டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் அவருக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், முன்னாள் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

1951-ம் ஆண்டு மே மாதம் 18-ந் தேதி ராஜஸ்தானில் ஜூன்ஜூனு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் விவசாய குடும்பத்தில் ஜெகதீப் தன்கர் பிறந்தார். சித்தோர்கர் பகுதியில் உள்ள சைனிக் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். அதன் பிறகு இயற்பியலில் பட்டப்படிப்பை முடித்த பிறகு ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் எல்.எல்.பி. படித்தார். முதல் தலைமுறை தொழில் நிபுணராக இருந்த அவர் மாநிலத்தின் முன்னணி வழக்கறிஞர்களில் ஒருவராகவும் திகழ்ந்தார். ராஜஸ்தான் ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு ஆகிய இரண்டிலும் பயிற்சி பெற்றுள்ளார். 1988-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஜனதாதளம் கட்சி சார்பில் ஜூன் ஜூனு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி. ஆனார். அப்போது பொது வாழ்வில் நுழைந்த அவர் 1990-ம் ஆண்டு பாராளுமன்ற விவகாரங்களுக்கான இணை மந்திரியாக பணியாற்றினார்.

ஜாட் சமூகத்தை சேர்ந்த ஜெகதீப் தன்கர் அதன் பிறகு மாநில அரசியலில் கவனம் செலுத்தினார். 1993-ம் ஆண்டு அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள கிஷன்கர் தொகுதியில் இருந்து ராஜஸ்தான் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019-ம் ஆண்டு மேற்கு வங்காள கவர்னராக நியமிக்கப்பட்டார். துணை ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா கூட்டணி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதையடுத்து அவர் கடந்த ஜூலை 17-ந் தேதி மேற்கு வங்காள கவர்னர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று இன்று துணை ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டார். அவர் பாராளுமன்ற மேல்சபை தலைவராகவும் இருப்பார். பாராளுமன்ற மேல்சபையை தலைமை தாங்கி நடத்துவார்.