முல்லைத்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்ததாக 9 தமிழக மீனவர்கள் கைது!

இலங்கை முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோதமாக ஊடுருவி மீன்பிடித்ததாக 9 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 9 மீனவர்களும் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும் அவர்களது மீன்பிடி படகுகள் அரசுடைமையாக்கப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மத்திய அரசு தலையிட்ட போதும் இலங்கை கடற்படை இத்தகைய அத்துமீறல்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்ததாக 9 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட 9 மீனவர்களும் தமிழகத்தின் நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. 9 மீனவர்களையும் கைது செய்த இலங்கை கடற்படை, திருகோணமலை துறைமுகத்தில் தடுத்து வைத்துள்ளது.

முன்னதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளார் சங்கங்களின் சம்மேளன தலைவர் வி.அருள்நாதன் , முல்லைத்தீவு போலீசில் ஒரு புகார் மனு கொடுத்திருந்தார். அதில், எரிபொருட்கள் இல்லாத நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் கடந்த 3 மாதங்களாக கடலுக்கு செல்லமுடியாத நிலையில் உள்ளனர். இதனால் முல்லைத்தீவு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே அரசு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக மீனவர்கள் முல்லைத்தீவு கடற்பரப்பில் இழுவைப் படகுகள் மூலம் தொடர்ச்சியாக மீன்பிடித்து வருகின்றனர். இதனால் ஈழத் தமிழ் மீனவர்களது மீன்வளம் சுரண்டப்படுகிறது. இலங்கை கடற்படையினர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் முல்லைத்தீவு கடலில் இந்திய இழுவை படகுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறியிருந்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில்தான் தற்போது 9 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.