அரவிந்த் கெஜ்ரிவால் பொய் பேசுவதில் வல்லவர்: மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பொய் பேசுவதில் வல்லவர் என, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி விமர்சனம் செய்துள்ளார்.

இலவச திட்டங்களுக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த கருத்துக்களைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், “கோடீஸ்வரர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யும் மத்திய அரசு ஏழைகள் மீது வரிச்சுமையை ஏற்றுவதாக” விமர்சித்திருந்தார். இதனை அடுத்து முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை பாஜக தலைவர்கள் பலரும் கண்டித்து வருகின்றனர். இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய, பாஜகவைச் சேர்ந்த, மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியதாவது:-

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு பொய்யர். பொய் பேசுவதில் வல்லவர். இலவச மின்சாரம் வழங்குவதாக பல மாநில தேர்தல்களில் வாக்குறுதி கொடுத்து வரும் அவர், டெல்லியில் அதனை நிறைவேற்றினாரா? டெல்லி அரசு பள்ளிகளை சிறப்பாக நடத்தி வருவதாக கூறி வருகின்றனர். அப்படியெனில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்களின் குழந்தைகள் ஏன் அங்கு படிப்பதில்லை. இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார்.