சிவமோகாவில் சுதந்திர தின விழாவில் வன்முறை!

கர்நாடக மாநிலம் சிவமோகாவில், போஸ்டர் ஒட்டுவது தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

கர்நாடக மாநிலத்தில், முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தின் சிவமோகா மாவட்டத்தில், நாட்டின், 76வது சுதந்திர தின விழாவை ஒட்டி, ஒரு தரப்பினர் பாஜகவினரால் போற்றப்படும் சாவர்க்கர் படத்துடன் கூடிய பேனரை வைத்துள்ளனர். அப்போது அந்த இடத்திற்கு வந்த மற்றொரு தரப்பினர், சாவர்க்கர் பேனரை அகற்றி விட்டு, ஆங்கிலேயருக்கு எதிராக போரிட்ட திப்பு சுல்தான் பேனரை நிறுவியதாகக் கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டதில் கைகலப்பில் முடிந்தது. இதில், ஒருவருக்கு கத்திக்குத்து ஏற்பட்டது. அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இரு தரப்பினர் கலவரத்தால் அந்தப் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிவமோகா காவல் துறையினர், தடியடி நடத்தி, கூட்டத்தைக் கலைத்தனர். மேலும், சம்பவ இடத்தில் இருந்து பேனரை அகற்றி விட்டு, தேசியக் கொடியை, காவல் துறையினர் ஏற்றி வைத்தனர். இதை அடுத்து அந்தப் பகுதியை காவல் துறையினர் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.

இது தொடர்பாக சிவமோகா காவல் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் அதிகளவில் கூட்டம் கூடுவதை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதிகளவில் போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டு உள்ளனர். இந்தப் பிரச்னையில், ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட விவகாரம் குறித்து விசாரித்து வருகிறோம்” என்றார்.