பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து: பாதுகாப்பு படை வீரர்கள் 7 பேர் உயிரிழப்பு!

ஜம்மு – காஷ்மீரில் பாதுகாப்புப் படை வீரர்கள் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளான சம்பவத்தில் 7 வீரர்கள் உயிரிழந்தனர்.

ஜம்மு – காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில், சந்தன்வாரி என்ற இடத்தில் இருந்து பகல்ஹாம் பகுதிக்கு, இந்தோ – திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையின் 37 வீரர்கள் மற்றும் ஜம்மு – காஷ்மீர் காவலர்கள் இரண்டு பேர் என மொத்தம் 39 பேர் ஒரு பேருந்தில் சென்றனர். சந்தன்வாரி என்ற இடத்தில், பேருந்து வந்த போது திடீரென பிரேக் பிடிக்காமல் போனதாகக் கூறப்படுகிறது. இதனால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இந்த கோர விபத்தில் 7 இந்தோ – திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 30க்கும் மேற்பட்ட வீரர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டு ஹெலிகாப்டர் மூலம் ராணுவ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர். விபத்து நடந்த பகுதியில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விபத்தில் உயிரிழந்த பாதுகாப்பு படை வீரர்களின் குடும்பத்திற்கு, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர். பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 7 வீரர்கள் பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.