கோவில்பட்டியில் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிப் படுகொலை!

கோவில்பட்டி அருகே ஊராட்சி மன்ற தலைவர் பொன்ராஜ் வெட்டிபடுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தெற்கு திட்டங்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் பொன்ராஜ் (63). இவர் இன்று அவரது பண்ணை வீட்டுத் தோட்டத்தில் அமர்ந்திருந்த போது உள்ளே புகுந்த மரம்ப நபர்கள் பொன்ராஜை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர். படுகாயமடைந்த பொன்ராஜ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியாகியுள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி டிஎஸ்பி மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து பொன்ராஜின் உடலை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலைக்கான காரணம் குறித்து விசாரித்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த பாஜக இளைஞரணி நிர்வாகி மற்றும் வசந்த் ஆகியோர் பிடிபட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், கடந்த கிராம சபை கூட்டத்தின்போது பாஜக அணியின் சார்பில் கோரிக்கைகளை கொடுத்ததாகவும் அதை ஊராட்சி மன்ற தலைவர் ஏற்க மறுத்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர். மேலும், இன்று பொன்ராஜை சந்திக்க சென்றபோது அவர் தங்களை தரக்குறைவாக பேசியதால் வெட்டி கொலை செய்தோம் என கார்த்திக் தரப்பில் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த கொலை சம்பவத்தில் பலருக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.