தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கு ராமதாஸ், ஜி.கே.வாசன் கண்டனம்!

துப்பாக்கி முனையில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் சமூக வலைதளமான டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவர்கள் 10 பேர், வங்கக்கடலில் கோடியக்கரை அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, சிங்களப் படையினரால் சட்டவிரோதமாக துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டுள்ளனர். சிங்களப் படையினரின் இந்த அத்துமீறல் கண்டிக்கத்தக்கது!

தமிழக மீனவர்களை சிங்களப் படை கைது செய்வது தொடர்கதையாகி வருகிறது. கடந்த இரு மாதங்களில் நடந்துள்ள ஆறாவது கைது இதுவாகும். இதுவரை மொத்தம் 48 மீனவர்களை சிங்களக் கடற்படை கைது செய்திருக்கிறது. அவர்களின் 6 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. சிங்களக் கடற்படையினரின் கைது நடவடிக்கைகள் சட்ட விரோதமானவை. இலங்கை கடற்படையினரின் இந்த நடவடிக்கைக்கு தமிழகத்திலிருந்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டும் கூட, அதை சிங்கள அரசு மதிக்கவில்லை. சிங்கள அரசின் அகங்காரத்திற்கும், அத்துமீறலுக்கும் முடிவு கட்டப்பட வேண்டும்.

கடந்த 6-ஆம் தேதி கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் வாடும் கீச்சாங்குப்பம் மீனவர்கள் 9 பேரையும், இப்போது கைது செய்யப்பட்டுள்ள அக்கரைப்பேட்டை மீனவர்கள் 10 பேரையும் அவர்களின் படகுகளுடன் மீட்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

நாகை மீனவா்கள் 9 பேரை இலங்கை மீனவா்கள் கைது செய்துள்ளதுடன், அவா்களின் படகையும் பறிமுதல் செய்துள்ளனா். வாழ்வாதாரத்துக்காக மீன்பிடிக்கச் செல்லும் மீனவா்களை இலங்கை கடற்படையினா் கைது செய்து வருவது தொடா்கதையாக உள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

இந்தியாவுடன் ஒருபுறம் நட்புடன் இருக்கும் இலங்கை, மறுபுறம் இந்திய மீனவா்களை கைது செய்யும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகிறது. நீண்ட காலமாக தொடரும் இந்தப் பிரச்னைக்கு இலங்கையுடன் பேசி மத்திய அரசு நிரந்தரத் தீா்வு காண வேண்டும். கைது செய்யப்பட்ட மீனவா்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு வாசன் கூறியுள்ளார்.