ஆன்லைன் சூதாட்டத்தில் இனி ஒரு தற்கொலை நடந்தால் ஆளுநரே பொறுப்பு: அன்புமணி

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தில் மீண்டும் தற்கொலை நிகழ்ந்தால், அதற்கு ஆளுநரே பொறுப்பு என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டையில் பாமக-வின் வேலூர், அனைக்கட்டு, காட்பாடி, ராணிப்பேட்டை , ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய புதிய நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை சந்தித்து அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:-

புதியதாக பிரிக்கப்பட்ட மாவட்டத்திற்கு அடிப்படை கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். பாலாற்றில் ஆந்திர அரசு தடுப்பணைகளை உயர்த்த போவதாக அறிவித்துள்ளது. இது கண்டனத்திற்குரியது. தமிழக அரசும், நீர் வளத்துறை அமைச்சரும் ஆந்திர அரசுடன் பேசி அணைகள் கட்டுவதையும் உயரத்தை உயர்த்துவதையும் தடுக்க வேண்டும். தமிழகத்தில் பாலாற்றில் மேலும் 20 தடுப்பணைகளை கட்ட வேண்டும். அத்துடன் பாலாற்றில் தோல் கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்தி விவசாயிகளை பாதுகாக்கவும், பாலாறு தென் பெண்ணை இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அதேபோல் ஆறுகளில் மணல் அள்ளப்படுகிறது. இதனை தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் சட்டவிரோதமாக அனந்தலை பகுதியில் கல்குவாரி செயல்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

ஆன்லைன் சூதாட்டத்தால் நிகழும் தற்கொலைகளை தடுக்க பாமக தொடர்ந்து சட்டம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி வந்தது. தற்போது ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய தமிழக அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. அந்த சட்டத்திற்கு உடனடியாக தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும். இல்லையென்றால் ஆன்லைன் சூதாட்டத்தால் இன்னொரு தற்கொலை நிகழ்ந்தால், அதற்கு தமிழக ஆளுநரே பொறுப்பு.

தமிழகத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு கலச்சாரம் அதிகரித்துள்ளது. இந்த கலாச்சாரம் வட நாட்டு கலாச்சாரம். இது தமிழகத்திற்கு தேவையில்லை. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் சட்டம் – ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று கருதினால், காவல்துறை ஊர்வலத்திற்கு தடை விதிக்கலாம். ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு மட்டும் காவல்துறை தடை விதிக்கவில்லை. இன்னும் சில கட்சிகளின் பேரணிக்கு சேர்த்து தடை விதித்துள்ளது. போதைப்பொருள் விற்பனை தமிழகத்தில் சரளமாக நடைபெற்று வருகிறது. இதனை முழுமையாக தடுக்க வேண்டும். அதேபோல் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் பழுதடைந்த பள்ளி கட்டிடங்கள் இடிக்கப்பட்டதை வரவேற்கிறேன். அதே நேரம் மாணவர்களின் நலன் கருதி பள்ளி கட்டிடங்களை கட்டி தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.