மியான்மரில் தமிழர்கள் நிலை? மியான்மருக்கான இந்திய தூதருக்கு எம்பி சு.வெங்கடேசன் நன்றி!

மியான்மரில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கை தொடர்பாக மதுரை எம்பி சு.வெங்கடேசனின் கடிதத்திற்கு மியான்மருக்கான இந்திய தூதர் உடனடியாக பதில் அளித்துள்ளார்.

தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து மியான்மருக்கு ஐடி உள்ளிட்ட துறைகளுக்கு வேலைக்காக சென்ற இளைஞர்களை ஏமாற்றி மியவாடி என்ற பகுதியில் சிறை வைத்து சட்டவிரோத செயல்களில் ஈடுபடுத்த முயல்வதாகவும் தமிழர்கள் உட்பட இந்தியர்கள் 300 பேரில் பாஸ்போர்ட் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை பறித்து வைத்துக் கொண்டு சித்ரவதை செய்வதாகவும் சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது. இதையடுத்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

மதுரை எம்.பி சு.வெங்கடேசனும், மியான்மரில் தமிழர்களை மீட்பதற்கான முயற்சிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வந்தார். மியான்மரில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க வேண்டும் என மியான்மரில் உள்ள இந்திய தூதருக்கும் சு.வெங்கடேசன் கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்திற்கு மியான்மர் இந்தியத் தூதர் பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து மதுரை எம்.பி சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மியான்மரில் சிக்கித் தவிக்கும் 4 தமிழர்களை மீட்க வேண்டும் என்று நான் 21.09.2022 அன்று மியான்மரில் உள்ள இந்தியத் தூதருக்கு கடிதம் எழுதி இருந்தேன். அதற்கு இந்தியத் தூதர் வினய்குமார் பதில் அளித்துள்ளார். அந்தக் கடிதத்தில், “தாய்லாந்தில் வேலை வாங்கித் தருவதாக இந்திய மற்றும் வேறு சில அந்நிய நாடுகளின் இளைஞர்கள் ஏமாற்றி அழைத்து வந்து சட்ட விரோதமாக மியான்மரில் வைத்திருக்கிற ஒரு சர்வதேச மோசடி இதில் சம்பந்தப்பட்டுள்ளது. மியாவாடி என்கிற இடத்தில் அவர்கள் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த இடம் மியான்மர் அரசின் முழுக் கட்டுப்பாட்டில் இல்லை. ஆயுதம் தாங்கிய இனக் குழுக்களின் செல்வாக்கின் கீழ் அது உள்ளது. இங்கேதான் இந்திய மற்றும் அந்நிய குடிமக்கள் சட்ட விரோதமாக வைக்கப்பட்டுள்ளனர். இங்கிருந்து அங்கு பயணம் சாத்தியமில்லை. தாய்லாந்து முனையில் இருந்து அவர்கள் அங்கே கொண்டு வரப்பட்டுள்ளனர். கிடைத்துள்ள தகவல்களின்படி 90 இந்தியர்கள் இந்த மோசடி வலைக்குள் வீழ்ந்துள்ளனர். அதில் 60 பேர் மியாவாடி பகுதிக்குள் மோசடி கும்பலால் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

நாங்கள் தொடர்ந்து மியான்மர் அரசுடனான ஒருங்கிணைப்புடன் நிலைமைகளை கவனித்து வருகிறோம். பல்வேறு வழிமுறைகள் வாயிலாக, வணிக சமூகத் தொடர்புகளையும் பயன்படுத்தி இந்தியர்களை மீட்க முயற்சிகள் செய்து வருகிறோம். காரணம் அந்த பகுதி உள்ளூர் அதிகாரிகளின் கட்டுப்பாட்டிற்குள் முழுவதும் இல்லாத நிலை இருப்பதே. இதுவரை மியாவாடி பகுதியில் இருந்து 30 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மற்றவர்களையும் விரைவில் மீட்க முயற்சிகள் செய்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

கடிதம் அனுப்பிய 24 மணி நேரத்திற்குள் பதில் தந்துள்ள மியான்மரின் இந்தியத் தூதருக்கு நன்றி. உங்கள் முயற்சிகள் வெற்றி பெற்று எல்லா இந்தியர்களும் மீட்கப்படுவார்கள் என்று நம்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.