தி.மு.க அரசு இரட்டை வேடம் போடுகிறது: பிரேமலதா

தி.மு.க அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒருநிலைப்பாடு, ஆட்சிக்கு வந்தபின்னர் ஒரு நிலைப்பாடு என இரட்டை வேடம் போடுகிறது என்று, தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா கூறினார்.

திண்டுக்கல்லில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா நிருபர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒருநிலைப்பாடு, ஆட்சிக்கு வந்தபின்னர் ஒரு நிலைப்பாடு என இரட்டை வேடம் போடுகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். உட்கட்சி தேர்தலில் கவனம் செலுத்தி வருகிறோம். அதன்பின்னர் தமிழகம் முழுவதும் கட்சியை பலப்படுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்படும்.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்றது. அதற்கு முதல்-அமைச்சர் பதில் அளிக்காதது ஏன்? மக்களுக்கு அவர் பதில் அளித்தே தீர வேண்டும். தமிழகம் முழுவதும் கஞ்சா மற்றும் மதுபோதையால் இளைஞர்கள் சீரழிகின்றனர். வருகின்ற பாராளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலையும் நடத்த மத்திய பா.ஜ.க அரசு முயற்சி செய்து வருகிறது. அதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. எப்போது நடந்தாலும் தேர்தல் நியாயமாக நடக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.