அரசியலமைப்பு சட்டப்படி ராஜராஜ சோழன் இந்து மன்னன்: எச்.ராஜா

இந்து என்பது மதம் அல்ல நாடு எனவும் அரசியலமைப்பு சட்டப்படி ராஜராஜ சோழன் இந்து மன்னன்தான் என்றும் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறியதாவது:-

தடை செய்யப்பட்ட பி.எப்.ஐ. அமைப்புக்கு ஆதரவாக செயல்படுவது கிரிமினல் குற்றம். பயங்கரவாதத்திற்கு ஆதரவாக திருமா, சீமான் ஆகியோர் திட்டமிட்டுள்ள மனித சங்கிலி போராட்டத்திற்கு அரசு அனுமதிக்க கூடாது. 1991 விடுதலை புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதற்காக கருணாநிதி ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது. பி.எப்.ஐ. உடன் விசிக இருக்கும் என திருமா பேசியுள்ளார். பயங்கரவாதிகளின் கைக்கூலி திருமாவளவன். அரசு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். திருமாவளவனும், சீமானும் தேச துரோகிகள். அவர்கள் மீது ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மின் கட்டண உயர்வு, சொத்து உயர்வு, பால் பொருட்கள் விலை உயர்வு ஆகியவற்றால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். பால் பாக்கெட்டில் ‘இது ஹலால் செய்யப்பட்டது’ என குறிப்பிடப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களுக்கு விரோதமான ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. பாண்டிச்சேரியில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் அமைதியாக தான் நடந்தது. டிஜிபி சைலேந்திர பாபு தமிழகத்தில் நீதிமன்ற அவமதிப்பை செய்துள்ளார். அவர் டிஜிபியாக இருக்க தகுதி இல்லை.

ராஜராஜ சோழன் சிவ பக்தன் எனவே அவர் இந்து தான். இந்து என்பது மதம் அல்ல, அது நாடு. அரசமைப்பு இந்துவை இந்துக்கள் அல்லாதோர் என வகைப்படுத்தி உள்ளது. இந்த மண்ணில் பிறந்த மதங்கள் இந்து மதங்கள் தான். 2300 ஆண்டுகளுக்கு முன்னர் ஆதி சங்கரர் அவதரித்தார். அப்போது 72 விதமான வழிபாட்டு முறைகள் இருந்த நிலையில் அதை ஆறாக ஒருங்கிணைத்தார். சிவம் வேற இந்து வேற இல்ல. வேதம் வேறு சைவம் வேறு அல்ல. வேதம் வேறு தமிழ் வேறு அல்ல. எனவே ராஜராஜன் இந்து தான். அரசமைப்பின்படியும் ராஜராஜன் இந்து தான். இந்து மதத்திற்கு துவக்கமே கிடையாது. அது அநாதி மதம். மாமன்னன் ராஜராஜ சோழன் 100% இந்து மன்னன் தான்.

அரசியலில் கூட்டணி என்பது தற்காலிகமானது. பாஜகவுக்கு எதிராக மம்தா – ஸ்டாலின் உள்ளிட்டோரால் அமைக்கப்படும் கூட்டணியால் பலனில்லை. பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டம் தேசிய கல்வி கொள்கையில் உள்ளது. அதை திருடி எடுத்து திமுக அரசு செயல்படுத்தி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.