ஐ.என்.எஸ்., அரிஹந்த் அணு நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணை சோதனை வெற்றி!

இந்தியாவில் தயாரான அணு சக்தியால் இயங்கக் கூடிய முதல் நீர்முழ்கிக் கப்பலான, ஐ.என்.எஸ்., அரிஹந்த் அணு நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது.

இந்தியாவிடம் முன்னர் ஐ.என்.எஸ். சக்ரா, அகூலா -2 ஆகிய அணுசக்தி நீர்முழ்கி கப்பல்கள் ரஷ்யாவிடமிருந்து குத்தகைக்கு எடுக்கப்பட்டு, இவை தான் இந்திய கப்பற்படையின் பயன்படுத்தப்பட்டு வந்தது. கடந்த 2009 ஆம் ஆண்டு முழுக்க இந்தியாவில் தயாரான ஐ.என்.எஸ். அரிஹந்த் அணுசக்தி நீர்முழ்கி கப்பல் கட்டும் பணி இந்துஸ்தான் கப்பல் கட்டும் நிறுவனம் துவக்கியது. கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில் 2012 ஆம் ஆண்டில் விசாகப்பட்டினம் கப்பற்படை தளத்தில் வெள்ளோட்டத்திற்காக பயன்படுத்தப்பட்டது. 2013 ஆம் ஆண்டு நீர்மூழ்கி கப்பலில் அணு உலை இயங்க துவங்கியது.

மொத்தம் 6 ஆயிரம் டன் எடை கொண்ட இந்த நீர்மூழ்கி கப்பல், 85 மெகாவாட் திறன் கொண்ட நீர் அழுத்த அணு உலைகள் மூலம் இயங்கும். இந்த நீர்மூழ்கி கப்பலில் இருந்தபடி ஏவுகணைகளை செலுத்தி எதிரிகளின் இலக்கை தாக்க முடியும். இந்த நீர்மூழ்கி கப்பல் 2018 ஆம் ஆண்டு பணிகள் முழுமையடைந்து அது கடற்படையில் சேர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் இன்று இந்த அணு நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது. வங்களா விரிகுடா கடற்பகுதியில் இந்த சோதனை நடந்தது. அப்போது இலக்கை துல்லியமாக தாக்கி அழித்ததாக ராணுவ அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது. இது போன்ற அணுசக்தியில் இயங்கும் நீர்முழ்கி கப்பல்கள் வைத்துள்ள அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், பிரிட்டன், சீனா ஆகிய நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.