பேராசிரியர் சாய்பாபா விடுதலையை நிறுத்தி வைத்த உச்ச நீதிமன்றம்!

பேராசிரியர் சாய்பாபாவை மும்பை உயர்நீதிமன்றம் விடுதலை செய்த உத்தரவை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

டெல்லி பல்கலைக்கழக் பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா, மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்டு 2014ஆம் ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டார். நக்சல் தலைவர்களுடன் சாய்பாபா தொடர்பு வைத்திருந்தார் என்றும், குறிப்பாக தலைவர் முப்பல்ல லஷ்மண ராவ் என்பவருடன் தொடர்ச்சியாக தகவல் பரிமாற்றத்தில் இருந்ததாகவும் போலீஸ் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் ஜி.என்.சாய்பாபா தவிர பத்திரிகையாளர் ஒருவர், பல்கலைக்கழக மாணவர்கள் என மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் பிணையில் கூட வராதபடி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி அமர்வு நீதிமன்றம், மாவோயிஸ்ட் தொடர்புகள் மற்றும் நாட்டிற்கு எதிராகப் போரை நடத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி பத்திரிகையாளர், டெல்லி பல்கலைக்கழக மாணவர், பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா என மொத்தம் 6 பேரையும் குற்றவாளிகள் என அறிவித்து தீர்ப்பளித்தது. அவர்கள் அனைவரும் நாக்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த தீர்ப்பை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் சாய்பா உள்ளிட்ட 6 பேரும் மேல்முறையீடு செய்தனர். வழக்கை விசாரித்த் நீதிபதிகள் ரோஹித் தியோ, அனில் பன்சாரே அடங்கிய அமர்வு ஜி.என்.சாய்பாபா உள்ளிட்டவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டது. இந்த வழக்கில் கைதானவர்களில் ஒருவர் மட்டும் சிறையிலேயே உயிரிழந்ததால் மற்ற ஐந்து பேரையும் விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், மாவோயிஸ்ட் அமைப்பினருடன் தொடர்பில் இருந்ததாக கூறி கைது செய்யப்பட்ட டெல்லி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சாய்பாபாவை மும்பை உயர்நீதிமன்றம் விடுதலை செய்த உத்தரவை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. நேற்று சனிக்கிழமை விடுமுறை என்ற போதும் இந்த வழக்கு அவசர வழக்காக விசாரிக்கப்பட்டு விடுதலை நிறுத்து வைக்கப்பட்டுள்ளது.