அமைச்சர் ரோஜா கார் மீது தாக்குதல், உதவியாளர் காயம்!

ஆந்திராவிற்கு மூன்று தலைநகரங்களை வலியுறுத்தும் விசாகா கர்ஜனை பேரணியில் பங்கேற்று விட்டு விமான நிலையம் வந்த அமைச்சர் ரோஜா உள்ளிட்ட ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் மீது பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி நிர்வாகிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநில அரசு ராயலசீமா, கடலோர ஆந்திரா, வட ஆந்திரா ஆகிய 3 பகுதிகளிலும் சம வளர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக 3 தலைநகர் என்ற கொள்கையுடன் விசாகப்பட்டினத்தை நிர்வாக தலைநகராகவும், கர்னூலை நீதிமன்ற தலைநகராகவும், அமராவதியை சட்டப்பேரவை தலைநகராகவும் அறிவித்தது. இதற்கு தெலுங்கு தேசம் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு, ஒரு மாநிலம் ஒரு தலைநகர் என வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், மூன்று தலைநகர்கள் வேண்டும் என வலியுறுத்தி வட ஆந்திரா கூட்டு நடவடிக்கை குழுவினர் விசாகா கர்ஜனை பேரணி நடத்தினர். இந்த பேரணிக்க்கு ஆதரவு தெரிவித்து ஆளும் கட்சி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். இந்தப் பேரணியை முடித்துக் கொண்டு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் ரோஜா, ஜோகி ரமேஷ், திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி, உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் விசாகப்பட்டினம் விமான நிலையத்திற்கு வந்தனர்.

அதேபோல், ஜனசேனா கட்சியின் தலைவரான நடிகர் பவன் கல்யாண் விசாகப்பட்டினத்தில் மூன்று நாள் ஜனவாணி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக விசாகப்பட்டினம் விமான நிலையம் வர இருந்தார். அவரை வரவேற்பதற்காக 300க்கும் மேற்பட்ட ஜனசேனா கட்சி தொண்டர்கள் அங்கு கூடியிருந்தனர். அப்போது ஒய்.எஸ்.ஆர் கட்சி தலைவர்கள் வந்ததால், ஜனசேனா கட்சியினர் அமைச்சர்கள் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினருக்கு எதிராக கோஷங்களை எழுப்பி, அவர்களது வாகனங்களை தாக்கினர். இதில் அமைச்சர் ரோஜாவின் உதவியாளருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இன்ஸ்பெக்டர் நாகேஸ்வரராவ் மற்றும் போலீசாரும் காயமடைந்தனர். பொதுமக்கள் பலரும் காயமடைந்தனர். விமான நிலையத்தில் வெளியே இருந்த பொருட்கள் சேதமாகின.

இதையடுத்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஜனசேனா கட்சியைச் சேர்ந்த 25 பேரை போலீசார் கைது செய்தனர். காவல்துறையினரின் பணிக்கு இடையூறு விளைவித்ததாகவும், அமைச்சர்கள் மீது கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் பவன் கல்யாண் தங்கி உள்ள ஓட்டலில் போலீசார் கட்டுப்பாடுகளை விதித்தனர். ஜனவாணி நிகழ்ச்சியில் பவன் கல்யாண் பங்கேற்ற நிலையில், நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக, பவன் கல்யாண் தங்கியிருந்த ஓட்டல் முன்பு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பவன் கல்யாண் திரும்பிச் செல்ல வேண்டும் என கோஷமிட்டனர். இதனால், அந்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தாக்குதல் சம்பவம் குறித்து ஆந்திரா அமைச்சர் ரோஜா கூறுகையில், “விசாகப்பட்டினத்தை நிர்வாக தலைநகராக அமைக்க வேண்டும் மாநிலத்திற்கு மூன்று தலைநகர் வேண்டும் என மாநில மக்களின் உணர்வை புரிந்து கொண்டு இந்த அரசு செயல்பட்டு வருகிறது. இதற்காக விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற விசாக கர்ஜனை பேரணி 100 சதவீதம் வெற்றி பெற்ற நிலையில் இதனை பொறுத்துக் கொள்ள முடியாத பவன் கல்யாண் ஆதரவாளர்கள் எங்கள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு பயப்பட மாட்டோம். பவன் கல்யாணின் சகோதரர் சிரஞ்சீவி பிரஜா ராஜ்யம் கட்சியை ஆரம்பித்து அவருக்கு ஒரு பேக்கேஜ் கிடைத்தவுடன் கட்சியை கலைத்து விட்டுச் சென்றார். அதேபோன்று பவன் கல்யாணும் மக்களுக்காக வரவில்லை அவருக்கு உரிய பேக்கேஜ் வந்துவிட்டால் அவரும் கட்சியை கலைத்து விட்டுச் சென்று விடுவார்.” என விமர்சித்துள்ளார்.