தமிழகத்தில் தவறுகள் இருந்தால் அதை சுட்டிக்காட்டுவேன்: கவர்னர் தமிழிசை!

தமிழகத்தில் தவறுகள் இருந்தால் அதை சுட்டிக்காட்டுவேன், அதை யாரும் தடுக்க முடியாது என புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.

தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னராக இருக்கும் தமிழிசை சவுந்தரராஜன், தெலுங்கானா கவர்னராக தனது 3 ஆண்டு பயணம் குறித்து ‛ரீடிஸ்கவரிங் செல்ப் இன் செல்ப்லெஸ் சர்விஸ்’ (Rediscovering self in selfless service) என்ற புத்தகத்தை சென்னையில் வெளியிட்டார். புத்தகத்தை வெளியிட்டு அவர் பேசியதாவது:-

என்னுடைய பணிகள் இடையூறாக இருப்பதாக ஆட்சியாளர்கள் சில நேரங்களில் நினைத்து விடுகின்றனர். என்னை குடியரசு தினத்தன்று கொடியேற்றவிடவில்லை. எனவே, நான் ராஜ்பவனுள் மட்டுமே கொடியேற்றினேன். கவர்னர் உரை ஆற்றவும் விடவில்லை. ஆனால், எவை எப்படியிருந்தாலும், நான் என் பணியில் இடையூறு செய்யவில்லை என்பது மட்டுமல்ல, இடைவெளியும் விடவில்லை.

எனக்கு தெரிந்த ஒருவர், ‛தமிழிசை எப்போது பார்த்தாலும் இங்குதான் இருக்கிறார். அவர் கவர்னர் பொறுப்பு வகிக்கும் அந்த இரண்டு மாநிலங்கள் என்ன ஆவது?’ என்று கேள்வி கேட்டார். இரண்டு மாநிலங்களிலும் எதுவும் ஆகவில்லை. எப்போது பார்த்தாலும் தெலுங்கானாவில் இருப்பதாக புதுச்சேரியில் இருப்பவர்கள் கூறுகின்றனர். புதுச்சேரிக்கு வந்தால், அண்ணன் நாராயணசாமி, தெலுங்கானாவில் விரட்டிவிட்டார்களா? எப்போது பார்த்தாலும் புதுச்சேரியிலேயே இருப்பதாக கேட்கிறார். தமிழகத்தில் இருப்பவர்கள் மற்ற இரண்டு மாநிலங்கள் என்ன ஆவது என்று கேட்கின்றனர்.

இன்றைக்குச் சொல்கிறேன்; தெலுங்கானாவில் முழுமையாக பணியாற்றுகிறேன். புதுச்சேரியிலும் முழுமையாக பணியாற்றுகிறேன். தமிழகத்தில் முழுமையான அன்பைச் செலுத்துகிறேன். அவ்வளவுதான்.
உங்களை அந்த மாநிலங்களில் விரட்டுவதால், தமிழகத்தில் ஏன் மூக்கை நுழைக்கிறீர்கள், வாலை நுழைக்கிறீர்கள் என்று கேட்கின்றனர். தமிழகத்தில் மூக்கையும் நுழைப்பேன், தலையை நுழைப்பேன், வாலையும் நுழைப்பேன், காலையும் வைப்பேன். தவறுகள் இருந்தால் அதை சுட்டிக்காட்டுவேன். அதை யாரும் தடுக்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.