நெருக்கடியில் ஆடைத்துறை: பிரதமர் மோடிக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்!

ஆடைத்துறையில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் கடுமையான நிதி நெருக்கடியை போக்கிடும் வகையில் சிறப்பு அவசரகால கடன் வரி உத்தரவாதத் திட்டத்தை அறிவிக்க வேண்டும் எனக் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைசர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதி நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த, 2021 செப்டம்பர் மாதம், நம் நாட்டில், 9,571 கோடி ரூபாய்க்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி நடந்துள்ளது. இந்தாண்டு செப்டம்பர் மாதம், 8,554 கோடி ரூபாய்க்கு மட்டுமே ஏற்றுமதி நடந்துள்ளது. கொரோனா காரணமாக சீனா மற்றும் ஹாங்காங்கில் தேவை குறைந்துள்ளதாலும், உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாகவும் இந்திய ஏற்றுமதியும் சரிவினைக் கண்டுள்ளது. இந்நிலையில், ஆடைத்துறை நெருக்கடியை சமாளிக்க உதவக் கோரி தமிழக முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் கூறியுள்ளதாவது:-

கொரோனா பெருந்தொற்றினால் ஏற்பட்டுள்ள பொருளாதார தாக்கம், ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் மேற்கில் எதிர்பார்க்கப்படும் பொருளாதார மந்தநிலை உள்ளிட்ட பல பல காரணிகளால் ஆடை ஏற்றுமதித் துறை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது. ஆயத்த ஆடை ஏற்றுமதியில் மாதந்தோறும் வளர்ச்சி விகிதம் இப்போது கூர்மையான சரிவைக் காட்டுகிறது.

அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய சந்தைகளை பூர்த்தி செய்யும் இந்தியாவின் மிகப்பெரிய பின்னலாடை ஏற்றுமதி தொகுப்புகளில் ஒன்றான திருப்பூர் அலகில் 95% குறு, சிறு நிறுவனங்கள் உள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது கோடைக் காலத்திற்கான கொள்முதல் ஆணைகள் தற்போது சுமார் 40% குறைந்துள்ளதாகவும், குறைந்த தேவை காரணமாக அடுத்தடுத்த மாதங்களில் ஏற்றுமதி பிரிவுகளும் அவற்றின் குறு சிறு நிறுவன விநியோகஸ்தர்களும் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளன. தொழிலாளர் வர்கத்தில் கணிசமான பகுதியைக் கொண்டுள்ள கிராமப்புறப் பெண்கள் வேலைவாய்ப்பு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது.

மேற்குறிப்பிட்ட சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு இந்த நெருக்கடியில் இருந்து மீண்டு வர ஆடைத் துறையில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு சிறப்பு அவசரகால கடன் வரி உத்தரவாதத் திட்டத்தை (ECLGS) உடனடியாக அறிவிக்கவேண்டும். புதிய திட்டத்தின் கீழ் 20 சதவீதம் (20%) கூடுதல் பிணையமற்ற கடன் வழங்கப்படலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.