மீண்டும் ஒமிக்ரான் அலை பரவவுள்ளது: உலக சுகாதார அமைப்பு!

உருமாறிய ஒமிக்ரான் புதிய அலை பரவவுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தலைமை விஞ்ஞானி கூறியுள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக உலகமே நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பெரும் துயரத்தை எதிர்கொண்டது. உடல்நலப் பாதிப்புகள், உயிரிழப்புகள், பொது முடக்கம், வாழ்வாதாரம் பாதிப்பு, கல்வி பாதிப்பு என உலகம் முழுவதும் உள்ள மக்கள் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொண்டனர். தடுப்பூசிகள் கண்டறியப்பட்டவுடன் பாதிப்புகள் சற்று குறைந்தாலும் உருமாறிய வைரஸால் மருத்துவ வல்லுநர்கள் சவாலை எதிர்கொண்டனர்.

தமிழகத்தில் முதல் அலை, இரண்டாம் அலை, மூன்றாம் அலை காரணமாக பெரியளவில் பாதிப்பு ஏற்பட்டது. தமிழகம் முழுவதும் தடுப்பூசி முகாம்கள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதால் பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அடுத்து ஒரு பாதிப்பு எழுந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி கூறியுள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் மரபணு மாறிய ஒமிக்ரான் வைரஸால் மேலும் ஒரு கொரோனா அலை வீசக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். புனேவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஒமிக்ரானால் தடுப்பூசி செலுத்தாத முதியவர்கள் பலர் உயிரிழந்துள்ளனர், தற்போது ஒமிக்ரானின் மரபணு மாறிய XBB வகை கொரோனா பரவி வருகிறது. குறிப்பிட்ட சில நாடுகளில் மேலும் ஒரு அலை வீச வாய்ப்புள்ளது. இதன் வீரியம் பற்றி இன்னும் முழுமையாக தெரியவில்லை” என்று கூறியுள்ளார்.