தமிழ்நாட்டில் ஆளுநராக பணியாற்றியது மிக மோசமான அனுபவம்: பன்வாரிலால் புரோகித்!

தமிழ்நாட்டில் ஆளுநராக பணியாற்றியது மிக மோசமான அனுபவம் என்ற பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் முந்தைய அதிமுக ஆட்சியின் போது, ஜெயலலிதாவின் திடீர் மறைவுக்கு பிறகு, தமிழகத்தில் குழப்பமான அரசியல் சூழ்நிலை நிலவியது. அப்போது 2017 ஆம் ஆண்டு, பன்வாரிலால் புரோகித் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். 2017ம் ஆண்டு அக்டோபர் 6 முதல் 2021 செப்டம்பர் 17 வரை தமிழகத்தின் 14 வது ஆளுநராக பணியாற்றியவர் பன்வாரிலால் புரோகித். இவர் ஆளுநராக இருந்த போது பல்வேறு சர்ச்சைகளிலும், குற்றச்சாட்டுகளிலும் சிக்கியுள்ளார். குறிப்பாக அதிமுக ஆட்சியில் அரசின் திட்டப் பணிகளை ஆய்வு செய்வதற்கு திமுக தரப்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் ஆளுநர் அதிகாரத்தை மீறி செயல்படுவதாக குற்றம்சாட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநராக செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில் தமிழக ஆளுநராக பணியாற்றிய அனுபவம் குறித்தும், பஞ்சாப் மாநில அரசு குறித்தும் பல்வேறு கருத்துக்களை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

நான் 4 ஆண்டுகள் தமிழ்நாட்டின் ஆளுநராக பணியாற்றினேன். அந்த அனுபவம் மிகவும் மோசமாக இருந்தது. தமிழகத்தில் துணைவேந்தர் பதவி 40-50 கோடி ரூபாய்க்கு விற்கப்படும் சூழல் இருந்தது. தமிழகத்தின் ஆளுநராக இருந்தபோது சட்டப்படி தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு 27 துணைவேந்தர்களை நியமித்த அனுபவம் எனக்கு இருக்கிறது. அதனால் இதுபோன்ற பணிகளை எப்படி செய்ய வேண்டும் என்பதை பஞ்சாப் அரசு என்னிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். பஞ்சாப் மாநிலத்தில் யார் திறமையானவர், யார் திறமையற்றவர் என்பது கூட எனக்கு தெரியாது. ஆனால் கல்வியின் தரம் மேம்படுவதை நான் பார்க்கிறேன். அதேபோல், பல்கலைக்கழக விவகாரங்களில் ஆளுநர் தலையிடுவதாக பஞ்சாப் அரசு குற்றம்சாட்டுகிறது. பல்கலைக்கழகங்கள் தொடர்பாக முடிவுகள் எடுக்கும் அதிகாரம் ஒரு வேந்தராக ஆளுநருக்கே உள்ளது. சட்டப்படி, பல்கலைக்கழக விவகாரங்களில் மாநில அரசு தலையிட முடியாது.

அண்மையில் துணை வேந்தர்களின் பதவி நீட்டிப்பு தொடர்பாக பஞ்சாப் மாநில அரசு மூன்று முறை கடிதம் அனுப்பியது. துணை வேந்தர் நியமனத்தில் ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்றால், பதவி நீட்டிப்பு வழங்குவதற்கு மட்டும் ஆளுநருக்கு எப்படி அதிகாரம் இருக்க முடியும். அதுமட்டுமல்லாமல் மூன்று முறை தற்காலிக துணை வேந்தர்களை நியமிக்க ஆளுநரிடம் ஒப்புதல் பெறப்பட்டது. ஆனால் முழுநேர துணை வேந்தர் நியமனத்திற்கு என்னிடம் ஒப்புதல் பெறப்படவில்லை.

பஞ்சாப் மாநிலத்தின் வேளாண் பல்கலைக்கழக வேந்தர் ஆளுநர் தான். தலைமைச் செயலாளர் அல்ல. இந்த விவகாரத்தில் நான் சட்ட ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுப்பேன். அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதாக உறுதிமொழி எடுத்துக்கொண்டுள்ளேன். அந்தப் பணியை செய்வதில் இருந்து என்னை யாராலும் தடுக்க முடியாது.