தீவிரவாத கலாச்சாரத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்: விஜயகாந்த்!

தமிழ்நாட்டில் தீவிரவாத கலாச்சாரம் தலை தூக்காத வண்ணம் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவன தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தைத் தொடர்ந்து டிஜிபி சைலேந்திர பாபு சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்தார். இந்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் மீது உபா சட்டம் பாய்ந்துள்ளது. இருப்பினும் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வர் திரு.மு.க ஸ்டாலின் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

ஏற்கனவே கொலை, கொள்ளை, வழிப்பறி, போதை கலாச்சாரம், பாலியல் வன்கொடுமை என தமிழகம் சீரழிந்து வரும் நிலையில் தற்போது சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தால் தமிழகம் தீவிரவாதிகளின் கூடாரமாக மாறி வருகிறதா? என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஏற்கனவே பெட்ரோல் குண்டு வீச்சு உள்ளிட்ட பல்வேறு அசம்பாவித சம்பவங்கள் நடந்துள்ளன. இதன் மூலம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் கேள்விக்குறியாகி உள்ளது.

தமிழக காவல் துறையை தன்வசம் வைத்துள்ள முதல்வர் திரு.மு.க. ஸ்டாலின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முழு கவனம் செலுத்த வேண்டும். கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி இது தீவிரவாத செயலா என்பதை கண்டறிந்து தமிழ்நாட்டில் தீவிரவாத கலாச்சாரம் தலை தூக்காத வண்ணம் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். மேலும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி, மக்களுக்கு, பாதுகாப்பான அச்சுறுத்தல் இல்லாத வகையில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவிடம் கோவை கார் வெடிப்பு குறித்து இன்று கேள்விகள் கேட்கப்பட்டது. இதற்கு நல்லகண்ணு, ‛‛கோவை கார் வெடிப்பு சம்பவம் ஏதோ ஆபத்து இருப்பதை உணர்த்துகிறது. தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்டவர்களை உடனே கைது செய்ய வேண்டும்” என்றார்.