உதயநிதி அமைச்சர் ஆவதால் தேனாறும், பாலாறும் ஓடப் போகிறதா?: எடப்பாடி பழனிசாமி!

உதயநிதி அமைச்சர் ஆவதால் தேனாறும், பாலாறும் ஓடப் போகிறதா?. தமிழகத்திற்கு மட்டும் மொத்தம் 4 முதல்வர்கள் இருக்கின்றனர் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சேலம் மாவட்டம் ஆத்தூரில் சொத்து வரி, மின் கட்டணம் மற்றும் பால் விலை உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவற்றை கண்டித்து, சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளர் இளங்கோவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனை அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-

தொடர்மழை இருக்கின்றபோது பல்வேறு மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டத்தை தள்ளி வைத்தார்கள். தொடர் மழை இடைவிடாமல் பெய்தாலும் அந்த மழையை பொருட்படுத்தாமலும் தி.மு.க. ஆட்சிக்கு முடிவு கட்ட தொண்டர்கள் இங்கு கூடி இருக்கிறார்கள். எம்.ஜி.ஆர் காலத்திலும் சரி, அம்மா காலத்திலும் சரி சேலம் மாவட்டம் என்றால் அ.தி.மு.க. கோட்டை. இந்த கோட்டையில் நுழைய பார்க்கிறார்கள். ஆனால் இந்த மழையை பொருட்படுத்தாமல் அரண்போல் காக்கின்ற மக்கள் இருக்கின்ற வரை சேலம் மாவட்டத்தில் எவரும் நுழைய முடியாது. பேச பேச வருண பகவான் மழையை பொழிந்து கொண்டிருக்கிறார். நான் ஒரு விவசாயி. மழையையும், வெயிலையும் பொருட்படுத்தாமல் உழைக்கின்ற உழைப்பாளி குடும்பத்தில் பிறந்தவன் நான். ஆகவே மழை எவ்வளவு கொட்டினாலும் பரவாயில்லை. இந்த மக்கள் விரோத ஆட்சியை அகற்றுவதற்கு எடுத்திருக்கிற சபதம் நிறைவேற்றவே இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தி இருக்கிறோம். மழையை கண்டோ இந்த ஆட்சியை கண்டோ பயன்படுகின்ற கூட்டம் இல்லை அ.தி.மு.க. கூட்டம். மழை வேறு கொட்டுகின்றது, எனக்கு தொண்டையும் சரியில்லை. இருப்பினும் மக்களுக்காக நான் இங்கு பேசுகிறேன்.

முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதிக்கு நாளை முடிசூட்டு விழா. இவர் இந்த நாட்டுக்கு உழைத்தவரா? இந்த மக்களுக்கு தான் என்ன செய்தார்? இவர் அமைச்சரானால் பாலாறும், தேனாறும் ஓடுமா? ஏற்கனவே எல்லா துறையிலும் ஊழல் நடைபெற்று கொண்டிருக்கிறது. இவர் வந்தால் அந்த ஊழலுக்கு எல்லாம் தலைவராக இருந்து செயல்படுவார். அதுதான் நடக்கும். கருணாநிதி மகன் ஸ்டாலின். ஸ்டாலினின் மகன் உதயநிதி. இவர்கள் வாழையடி வாழையாக குடும்ப ஆட்சி செய்வதற்கு இதுவே ஒரு உதாரணம். மாநிலத்தில் ஒரு முதல்வர் தான் இருப்பார்கள். தமிழகத்திற்கு நான்கு முதல்வர்கள் இருக்கிறார்கள். ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மருமகன் சபரீசன், மகன் உதயநிதி. ஒரு முதல்வருகே தாக்குப் பிடிக்க முடியாது. நான்கு முதல்வர்கள் இருந்தால் தமிழகம் தாக்குப் பிடிக்குமா? ஆகவே குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுவோம். வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டுவோம்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அளித்த 525 தேர்தல் வாக்குறுதிகளில் எதையுமே விடியா அரசு செய்யவில்லை. அனைத்து குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை, 100 நாள் வேலை திட்டத்தை 150 நாளாக உயர்த்தி வழங்குவது, கல்வி கடன், பெட்ரோல், டீசல் விலை, முதியோர் உதவித்தொகை 1,000 ரூபாயில் இருந்து 1,500 ரூபாயாக உயர்த்தி தருவது உள்ளிட்ட வாக்குறுதிகள் எங்கே போனது?. திராவிட மாடல் ஆட்சியில் கமிஷன், கலெக்‌ஷன், கரெப்ஷன் தான் காணப்படுகிறது. கெங்கவல்லி சட்டமன்ற தொகுதியில் தலைவாசல் ஆட்டுப் பண்ணையில் ஆயிரம் கோடி ரூபாயில் கால்நடை பூங்கா அமைக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. அதை திமுக அரசு இன்னும் முறையாக நடைமுறைபடுத்தவில்லை. ஆத்தூர் நகராட்சிக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் அதிமுக ஆட்சியில் செய்து கொடுத்தோம். இந்த திட்டங்களை மட்டுமே திமுக அரசு திறந்து வைக்கிறது. யாரோ பெற்ற பிள்ளைக்கு யாரோ பெயர் சூட்டுவது போல, திமுக ஆட்சி நடத்தி வருகிறது.

தற்போது பெய்து வரும் கன மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீணாக கடலுக்கு செல்கிறது. ஆங்காங்கே நீரை தேக்கி வைக்க தற்போதைய ஆட்சி நடவடிக்கை எடுக்கவில்லை. ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை திமுக மாவட்ட செயலாளர் போல் நடத்துகின்றனர். வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் விரோத திமுக அரசை மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள். திமுக அரசு சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை உள்ளிட்டவற்றின் வரி உயர்வை உடனடியாக திமுக அரசு குறைத்திட வேண்டும். இல்லையெனில் மிகப்பெரிய அளவில் போராட்டங்களை சந்திக்க வேண்டி இருக்கும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.