ஆபாச வீடியோ வழக்கில் ராஜ் குந்த்ராவுக்கு முன் ஜாமீன்!

ஆபாச வீடியோக்களை எடுத்து அதனை விநியோகம் செய்தது தொடர்பான வழக்கில் ராஜ்குந்த்ரா, நடிகைகள் ஷெர்லின் சோப்ரா மற்றும் பூனம் பாண்டே ஆகியோருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.

ஆபாச வீடியோக்களை எடுத்து அதனை விநியோகம் செய்தது தொடர்பாக நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும் தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நடிகைகள் ஷெர்லின் சோப்ரா மற்றும் பூனம் பாண்டே ஆகியோர் இணை குற்றவாளிகளாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக போலீசார் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு ராஜ்குந்த்ரா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேஎம் ஜோசப் மற்றும் பிவி நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணை செய்த நீதிபதிகள் அமர்வு ராஜ்குந்த்ரா, நடிகைகள் ஷெர்லின் சோப்ரா மற்றும் பூனம் பாண்டே ஆகியோருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். மேலும் போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். முன்னதாக இந்த வழக்கில் ராஜ்குந்த்ராவை கைது செய்வதற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு இருந்தது.