தமிழகத்தில் மின்இணைப்புடன் 1 கோடி ஆதார் எண்கள் இணைப்பு: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் மின்இணைப்புடன் 1 கோடியே 3 லட்சம் ஆதார் எண்கள் இணைக்கப்பட்டு இருப்பதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் நேற்று நடைபெற்ற சிறப்பு முகாமினை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, இயக்குநர் (பகிர்மானம்) மா.சிவலிங்கராஜன் மற்றும் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர். பேட்டி ஆய்வுக்கு பிறகு, அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மின் நுகர்வோர் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கக்கூடிய சிறப்பு முகாம்கள் தொடங்கப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தேவைப்படுகிற நாட்களுக்கேற்ப இந்த சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு இருக்கிறார். இன்று (நேற்று) காலை 11 மணிக்கு வரை ஏறத்தாழ ஆன்லைனில் 51 லட்சம் பேர் இணைத்துள்ளார்கள். பிரிவு அலுவலகங்களில் செயல்படும் ஆன்லைன் சேவையில் 52 லட்சம் பேர் இணைத்திருக்கிறார்கள். மொத்தம் 1 கோடியே 3 லட்சம் பேர் மின் இணைப்பு எண்ணுடன் சேர்த்து ஆதார் எண்ணை இணைக்கக்கூடிய அந்த பணிகள் நிறைவு பெற்றிருக்கிறது. மக்கள் ஒத்துழைப்பு இந்த மாதம் இறுதி வரை அதற்கான காலங்கள் இருக்கின்றன. எனவே, இந்த மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கக்கூடிய பணிகள் மிகச் சிறப்பாக மக்கள் முழு ஒத்துழைப்பை வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள். இப்பொழுது மேம்படுத்தப்பட்டு உடனுக்குடன் அதாவது 2 நிமிடங்களில் ஒருவர் சுலபமாக இணைத்துவிடலாம். சென்னையைப் பொறுத்தவரை வணிக வளாகங்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட சில இடங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே, இந்த மாத இறுதிக்குள் பெரும்பான்மையான மின் இணைப்பு எண்ணோடு ஆதார் எண்ணை இணைக்கக்கூடிய பணிகள் முடியும்.

சென்னையைப் பொறுத்தவரை 15 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வணிக வளாகங்கள், அதேபோல தலைமைச்செயலகத்தினுடைய இந்த பகுதிகள் உள்ளிட்ட 15 இடங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தேவைப்பட்டால் கூடுதலாக சிறப்பு முகாம் நடத்துவதற்கு மின்வாரியம் தயாராக இருக்கிறது. வரும் 25-12-2022 அன்று கிருஸ்துமஸ் பண்டிகை நாளைத் தவிர, மீதம் இருக்கக்கூடிய விடுமுறை நாட்களிலும் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறும். மின் வாரியத்தைப் பொறுத்தவரை கடந்த ஆண்டில் ரூ.7 கோடிக்கு சாம்பல் மூலம் வருமானம் வந்தது. தற்போது ரூ.13.71 கோடி வருமானம் கிடைத்திருக்கிறது. வருமானம் இரட்டிப்பு ஆக்கப்பட்டிருக்கிறது. ரூ.6,600 கோடி ஆர்.இ.சி.யில் வாங்கிய கடனுக்கு 13 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக வட்டி குறைக்கப்பட்டிருக்கிறது. ஒரு வருடத்திற்கு ரூ.84 கோடி அளவுக்கு வட்டி கட்டுவதில் இருந்து செலவு குறைக்கப்பட்டுள்ளது. இப்படி ஒவ்வொரு பிரிவிலும் என்னென்ன கடந்த காலங்களில் செலவீனங்கள் கூடுதலாக இருந்தது?. அவற்றில் எவை எவைகளை சீரமைக்கலாம் என்று கவனத்தில் கொண்டுதான் மின் வாரியம் மேம்படுத்தக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாகத்தான் ஆதார் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதைப் பொறுத்தவரை பொதுமக்களோ, வணிக நிறுவனங்களோ, தொழில் முனைவோர்களோ அச்சம் கொள்ள தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.