அதிமுகவை பாஜக உடைக்கிறது என்று சொல்வதை விட, விழுங்குகிறது: திருமாவளவன்

அதிமுகவை பாஜக உடைக்கிறது என்று சொல்வதை விட, அதிமுகவை பாஜக விழுங்குகிறது என்று சொல்லலாம் என விசிக தலைவர் தொல். திருமாவளவன் குறிப்பிட்டார்.

தமிழ்நாடு கோவில் மனைகளில் குடியிருப்போர் சங்கத்தின் சார்பாகச் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கலந்து கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் கூறியதாவது:-

தமிழ்நாடு கோவில் மனையில் குடியிருப்போர் சங்கத்தின் சார்பில் இன்று இந்த கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. 1998ஆம் ஆண்டிற்கு முன்பு இருந்த, பகுதி முறையில் வாடகை வசூலிக்கும் முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும். 2016ஆம் ஆண்டு போடப்பட்ட அரசாணை 28ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தமிழகத்தில் சில கோயில் மனைகளில் பொதுமக்கள் பல ஆண்டு காலமாக வசித்து வருகிறார்கள். இப்படி கோயில் மனையில் நீண்ட காலமாக வசித்து வருபவர்களுக்கு அவரவர் வசிக்கும் இடத்திலேயே மனைப்பட்டா வழங்க வேண்டும். இந்த விவகாரத்தில் தற்போதைய தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் அமைக்கப்பட்ட சில பரிந்துரைகளை அளித்திருந்தன. அதை உடனடியாக வெளியிட்டு நடைமுறைப்படுத்த வேண்டும்.

கோயில் மனைகளில் குடியிருப்போரின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இது தொடர்பாக விரைவில் முதல்வரையும் சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளேன். வாடகை வசூல் செய்கிறோம் என்ற பெயரில் அங்கு வசிக்கும் ஏழ்மை மக்களிடம் அதிகாரிகள் அத்துமீறி நடந்து கொள்கிறார்கள். இந்த அடாவடி பேச்சையும் போக்கையும் அவர்கள் இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். சில அதிகாரிகள் தமிழகத்தில் பல பகுதிகளில் கோயில் மனைகளில் பல ஆண்டுகளாகக் கடைகளை நடத்தி வருகிறார்கள். சில இடங்களில் இப்படி கடையை நடத்தி வருபவர்களிடம் சென்று கடைகளை காலி செய்யச் சொல்லி வற்புறுத்துகிறார்கள். மேலும், இந்த கடைகளை இடிக்கும் முயற்சியிலும் அவர்கள் ஈடுபடும் போக்கு அதிர்ச்சி தருவதாகவே அமைந்துள்ளது. சில நேரங்களில் அதிகாரிகள் ஆட்சியாளர்களின் விருப்பத்திற்கு மாறாகச் செயல்படுவார்கள். வீடுகளை இடிக்க வேண்டும் என அரசு அதிகாரிகளிடம் எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. ஆனால், சரியாக இருக்கிறோம் என்பதைக் காட்டிக் கொள்வதற்காக ஒரு சில அதிகாரிகள் தேவையில்லாமல் இதுபோன்று செயல்படுகிறார்கள்.

தமிழ்நாடு ஆளுநராக உள்ள ஆர்.என்.ரவி சட்டசபையில் இயற்றப்பட்டுள்ள அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் போட்டுள்ளார். மேலும், நீட் ஆதரவு, தேசிய கல்விக் கொள்கை விவகாரங்களில் ஒரு தரப்பிற்கு ஆதரவாகவே ஆளுநர் செல்லும் இடங்களில் எல்லாம் பேசி வருகிறார். ஆளுநர் ரவியின் மக்கள் விரோத போக்கைக் கண்டித்தும் அவரை திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் குடியரசுத் தலைவரிடம் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் என்பவர் அரசியல் சாசனத்தின்படி நியமிக்கப்பட்ட ஒருவர். தற்போதுள்ள ஆளுநர் இதை உணராமல் ஆர்எஸ்எஸ் தொண்டரைப் போலச் செயல்பட்டு வருகிறார். அதிமுகவை பாஜக உடைக்கிறது என்று சொல்வதை விட, அதிமுகவை பாஜக விழுங்குகிறது என்று சொல்லலாம். இதை அதிமுக தொண்டர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.