தமிழ்நாட்டில் கஞ்சா இல்லாத நிலையை உறுதி செய்ய வேண்டும்: ராமதாஸ்

தமிழ்நாட்டில் இனி கஞ்சா இல்லை என்ற நிலையை கஞ்சா வேட்டை 3.0 உறுதி செய்ய வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களாக கஞ்சா வேட்டை 3.0 நடைபெற்று வருவதாகவும், 403 கஞ்சா வணிகர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் காவல்துறை தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. எதற்காக இந்த நடவடிக்கையோ, அந்த இலக்கை எட்ட உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். கஞ்சா விற்றதாக கைதாகி விடுதலையானவர்கள் மீண்டும் கஞ்சா விற்பது வாடிக்கையாகி விட்டது. இது தொடர்ந்தால் கஞ்சாவை ஒழிக்க முடியாது.

கஞ்சா விற்றதாக இரண்டாவது முறை கைதாவோருக்கு கடும் தண்டனையும், மூன்றாவது முறை கைதாவோரை குண்டர் சட்டத்திலும் சிறையில் அடைக்க வேண்டும். தமிழ்நாட்டில் இனி கஞ்சா இல்லை என்ற நிலையை கஞ்சா வேட்டை 3.0 உறுதி செய்ய வேண்டும். கஞ்சா விற்பனை குறித்து காவல்துறைக்கு பொதுமக்கள் தகவல் அளிக்க வசதியாக மூன்று இலக்க இலவச தொலைபேசி அழைப்பு எண்ணை உருவாக்கி அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.